தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2020, 4:46 PM IST

ETV Bharat / sitara

எழுத்தாளர் சா. கந்தசாமியின்  மறைவிற்கு இயக்குநர் தங்கர்பச்சான் இரங்கல்!

சென்னை: சாகித்ய அகாதமி  விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமியின்  மறைவிற்கு இயக்குநர் தங்கர்பச்சான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தங்கர்பச்சான்
தங்கர்பச்சான்

சென்னை நந்தனத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி, கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதியுற்று வந்தார்.

சிகிச்சைக்காக இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜூலை 20ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 31) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. 1998இல் 'விசாரணைக் கமிஷன்' என்ற புதினத்துக்காக, தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவருக்கு கிடைத்தது.

இவரின் மறைவுக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த இரங்கல் செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது, 'திரைப்படக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்த காலம் அது! உலகத் திரைப்படங்களை தேடி அலையும் வேளையில், தமிழில் நவீன இலக்கியத்தின் அறிமுகம் கிடைத்ததும் அந்த நாட்கள் தான்.

கி. ராஜநாராயணன் தொடங்கி நாஞ்சில் நாடன், சா. கந்தசாமி என ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் கடிதங்கள் வழியாக தொடர்பை வளர்த்துக் கொண்டும், அவர்களது படைப்புகளை இரவு பகல் பாராமல் வாசித்ததும் அந்த நாட்கள் தான்.

சா. கந்தசாமி அவர்களின் 'சூரிய வம்சம்' தொடங்கி 'சாயாவனம்', 'அவன் ஆனது', 'தக்கையின் மீது நான்கு கண்கள்' தொகுப்பு வரை அனைத்தையும் ஒரு வார காலத்திற்குள் வாசித்து முடித்திருக்கிறேன்.

சா. கந்தசாமியின் எழுத்துக்கள் ஒரு கிராமத்து தமிழ் இளைஞனின் எண்ணங்களையும், ஏமாற்றங்களையும், எதிர்பார்ப்புகளையும், அலைக்கழிப்புகளையும் கொண்டிருந்ததால் நான் ஈர்க்கப்பட்டேன்.

எல்லோரும் 'சாயாவனம்' நாவலை அவரின் சிறந்த படைப்பாக பாராட்டுவார்கள். அவருடைய 'அவன் ஆனது' நாவல் என்னால் மறக்க முடியாதது. அடுத்து 'தொலைந்து போனவர்கள்' என் வாழ்நாளில் இறுதிக்காலம் உள்ளவரை, மறக்கமுடியாத பாத்திரங்களால் புனையப்பட்டது. இந்த இரண்டு நாவல்களையுமே திரைப்படமாக உருவாக்கும் திட்டம் இருக்கின்றது.

எப்பொழுதும் என் மீது தனித்த அன்பும் நட்பும் கொண்டிருந்தவர் சா. கந்தசாமி. அவரது எழுத்துக்களைப் போன்றே அவரும் பாசாங்கற்ற சிறந்த மனிதர்.

படைப்பாளிகள் மறைந்தாலும் அவர்கள் உருவாக்கிய படைப்புகள் இவ்வுலகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும்! அந்த வரிசையில் சா. கந்தசாமி எழுத்துக்கள் என்றும் நிலைபெற்றிருக்கும் என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details