தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#BIGIL 'பிகில்' படத்துக்கு தடைகோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: விஜய் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் பிகில் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

By

Published : Oct 22, 2019, 9:49 AM IST

verdict-on-vijays-number-bigil-movie-case

விஜய்-அட்லி கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் பிகில் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி உதவி இயக்குநர் செல்வா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.

நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ளது பிகில். தெறி, மெர்சல் திரைப்படங்களைத் தொடர்ந்து விஜய்-அட்லி கூட்டணிக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து தயாராகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளர் உள்ளிட்ட மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பிகில் திரைப்படம் தொடங்கப்பட்ட நாள் முதல் உதவி இயக்குநர் கே.பி. செல்வா என்பவர் இந்தக் கதை தன்னுடையது என்று கூறி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த விவகாரம் காப்புரிமை சம்பந்தப்பட்டிருப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்ததை அடுத்து, அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கே.பி. செல்வா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும், கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருப்பதால், பிகில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக்கூறி கே.பி. செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு சம்பந்தமாக இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பணத்திற்காகவும், விளம்பரத்துக்காகவும் அவர் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இயக்குநர் அட்லி தரப்பில், பிகில் கதையை தான் 2018ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததாகவும், மனுதாரரின் கதை அதன்பிறகே பதிவு செய்யப்பட்டுள்ளதால் முகாந்திரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் மனுதாரர் செல்வா தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி, பட நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிடும் முன்னர், வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை அணுகவும் நீதிபதி எப்படி அனுமதி அளித்தார் எனக் கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், படத்துக்கு தடை விதிக்கக் கோரி கே.பி. செல்வா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலையில், கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிகில் திரைப்படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க...

#BigilRelease - திருச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details