தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நா.முத்துக்குமார் முதல் சேதுராமன்வரை- தமிழ் சினிமாவில் ஏற்பட்ட எதிர்பாரா மரணங்கள்

தமிழ் சினிமாவில் யாருமே எதிர்பார்க்காத சிலரின் மரணங்கள் தொகுப்பை காண்போம்.

தமிழ் சினிமாவில் ஏற்பட்ட எதிர்பாரா மரணங்கள்
தமிழ் சினிமாவில் ஏற்பட்ட எதிர்பாரா மரணங்கள்

By

Published : Mar 28, 2020, 3:16 PM IST

மரணம் என்ற சொல்லை கேட்டாலே நம்மில் பலருக்கும் உடலே நடுங்கிவிடும். பணக்காரன், ஏழை என்ற எந்த பேதமும் மரணத்திற்கு தெரியாது. உலகில் ஒருவர் பிறந்துவிட்டால், அவர் ஒரு நாள் கண்டிப்பாக மரணத்தை சந்தித்துதான் ஆகவேண்டும். அதுதான் இயற்கையின் நியதி. ஆனால் அவர் எப்படி தனது மரணத்தை சந்திக்கிறார் என்பதே முக்கியமானது. அதிலும் ஒரு சிலர் நீண்ட வருடங்கள் வாழவேண்டும், என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அவர்களின் உயிர் யாருமே எதிர்பார்க்காத சூழலில், அவருக்கு சற்றும் சிரமமில்லாமல் மற்றவர்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து சென்றிருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கவே முடியாத சிலரின் மரணம் இன்றும் நம் மனதில் நீங்கா வடுவாகவே மாறியுள்ளது.

நா.முத்துக்குமார்:

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார், தமிழ் சினிமா பாடல்களில் இவர் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் மறுக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது. இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்தும், நம்முடைய எண்ண ஓட்டத்துடன் எளிதாக ஒட்டிக்கொள்ளும். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி திடீரென்று நம்மை விட்டு பிரிந்தார். இவரின் இழப்பை இன்றுவரை அவ்வளவு எளிதில் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் தனது பாடல் வரிகளால் அந்த அளவிற்கு நம்மை அவர் கட்டிபோட்டு வைத்துள்ளார். அவரை இழந்தாலும் அவரது தமிழ், அவரின் இருப்பை என்றும் சொல்லிக்கொண்டே இருக்கும்.

ஸ்ரீ தேவி:

ஸ்ரீ தேவி

தமிழ் சினிமாவில் 'மயிலு' என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீ தேவி. 16 வயதினிலிலே படத்தில் 'மயிலு' என்ற கதாபாத்திரத்தில் நடித்தற்காக இவரை மயிலு என்றே அழைக்க ஆரம்பித்தது தமிழ் சினிமா. கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்று அங்கு லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வந்தவர். முக்கியமாக, தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட் சென்று அங்கு வெற்றிபெற முடியும் என்பதை மற்றவர்களுக்கு அழகும் திருத்தமுமாக சொன்னவர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது உறவினர் திருமணத்திற்காக துபாய் சென்றபோது குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். யாருமே எதிர்பார்க்காத இவரது மரணம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நடிகர் முரளி:

நடிகர் முரளி

'பூவிலங்கு' படம் மூலம் அறிமுகமான முரளி இதுவரை 84 படங்களில் நடித்துள்ளார். பொதுவாக சினிமாவில் கருப்பாக இருக்கும் நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும், அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அது நிலைக்காமல் காணாமல் போய்விடும் என்ற பிம்பத்தை உடைத்தவர்களில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

முரளி-அதர்வா

அதற்கு எடுத்துக்காட்டாக இவர் நடித்த 'வெற்றிக்கொடிகட்டு' படத்திலேயே 'கருப்புதான் எனக்கு பிடித்த' பாடல் அமைந்திருக்கும். இப்படி யாராலும் வெறுக்கவே முடியாத முரளி கடந்த 2010ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். தற்போது முரளியின் மகன் அதர்வாவும் கோலிவுட்டில் சிறந்த நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

சேதுராமன்:

சேதுராமன்

தோல் சிகிச்சை மருத்துவராகவும், நடிகருமான சேதுராமன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் கடந்த வியாழக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இளம் வயதிலேயே உயிரிழந்த சேதுராமனின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படிங்க:லாக் டவுனால் ஜிம் லாக்... இதை வச்சி உடற்பயிற்சி செய்யலாம் - ஜிம் 'மாஸ்டர்' சாந்தனு

!

ABOUT THE AUTHOR

...view details