கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு லியோர்னாடோ டிகாப்ரியோ புதிய முயற்சியில் நிதி திரட்ட உள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிரபலங்களும் பொதுமக்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகரும் சமூக ஆர்வலருமான லியோர்னாடோ டிகாப்ரியோ கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்ட ஒரு புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோர்னாடோ டிகாப்ரியோ கூறியிருப்பதாவது, "என்றைக்காவது நீங்கள் தி கிரேட் மார்ட்டின் ஸ்கோர்செஸி, ராபர்ட் டி நிரோ மற்றும் என்னுடன் பணியாற்ற முடிந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு. நானும் ராபர்ட்டும் மார்ட்டின் ஸ்கோர்ஸி இயக்கவுள்ள 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்' என்னும் படத்தில் நடிக்க உள்ளோம்.
இந்தப் படத்தில் எங்களோடு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை உங்களுக்குத் தருகிறோம். மேலும் ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்புத் தளத்தில் எங்கள் மூவரோடும் இருக்கலாம். படத்தின் ப்ரீமியர் காட்சிக்கு அனுமதி உண்டு. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது http://www.allinchallenge.com என்ற இந்த தளத்திற்குச் சென்று, கரோனா பாதித்த மக்களுக்கு உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இத்திரைப்படம் 1920ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஓசே என்ற பகுதியில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றிய, 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது.