தமிழ்நாடு

tamil nadu

மதுவோடு கரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பிவைக்க வேண்டாம் - கஸ்தூரி

By

Published : May 5, 2020, 2:03 PM IST

சென்னை: கடையில் வாங்கும் மதுவோடு கரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பவேண்டாம் என டாஸ்மாக் திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் திறப்பதை விமர்சித்த கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷப்பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழ்நாடு அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு.

நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்? குடி, கரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள்.

இதற்கு கேவலமான சப்பைக்கட்டுகள் வேறு. இதை நான் எதிர்பார்த்ததுதான். நேற்று ஏமாந்துவிட்டேன். ஏமாந்து விட்டோம்.

தமிழ்நாடு அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். கரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தபோது மூடிவிட்டு, இப்பொழுது அதிகமாகும்பொழுது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயைவிட இழப்பு அதிகமாகிவிடும்.

கடையில் வாங்கும் மதுவோடு கரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பிவைக்கவேண்டாம்."

இவ்வாறு அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் திறப்பதை விமர்சித்த கஸ்தூரி

கடந்த 40 நாள்களாக நீடித்து வந்த ஊரடங்கானது தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் நேற்று (மே 4) முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் ஐந்து வாரங்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி கிடந்த பொதுமக்கள் வெளியே வந்து தங்களது அன்றாடப் பணிகளை வழக்கமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், தனிமனிதர் இடைவெளியை கடைப்பிடிக்காமல் நீண்ட வரிசையில் காத்திருந்து மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன.

தற்போது டாஸ்மாக் கடை திறப்பை எதிர்நோக்கி தமிழ்நாட்டு மது பிரியர்கள் காத்திருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அரசின் இந்த முடிவை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: அறிக்கை விட்டு அழிக்க முடியுமா... கரோனா அரக்கனை - காட்டமான கஸ்தூரி

ABOUT THE AUTHOR

...view details