திருவனந்தபுரம்: பாலக்காடு மாவட்டம் வாளையார் பகுதியில் பட்டியலின சிறுமிகள் இருவர் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வசம் ஒப்படைக்க கேரள அரசு திங்கள்கிழமை முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கில், வாளையார் பட்டியலின சிறுமிகளின் வன்புணர்வு படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து சிறப்பு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்து, மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டது. கொலையுண்ட சிறுமியின் தாய், இந்த வழக்கின் விசாரணை மாநில அரசின் கீழ் நடந்தால் உண்மை வெளிவராது; மத்திய புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
வாளையார் பட்டியலின சகோதரிகள் இருவர் கொலை வழக்கு 2017ஆம் ஆண்டுகளில் நாட்டை உலுக்கியது. 2017ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி, 13 வயதான சிறுமி தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த அடுத்த இரு மாதங்களில் அவளின் 9 வயதான தங்கை மார்ச் 4ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.