தமிழ்நாடு

tamil nadu

Bastille Day: பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய படை - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

By

Published : Jul 15, 2023, 10:29 AM IST

பிரதமர் மோடி, தனது பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத நிகழ்வு என்றும் "தேசிய தின அணிவகுப்பில் இந்தியக் குழுவினர் கலந்து கொண்டு பெருமை சேர்த்ததைப் பார்த்தது கண்கொள்ளா நிகழ்வு ஆக இருந்தது." என்று தெரிவித்து உள்ளார்.

Seeing Indian contingent in Bastille Day parade was wonderful: PM Modi
பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்தியப் படையினரை பார்ப்பது அற்புத நிகழ்வு - பிரதமர் மோடி!

பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று உள்ளார். தனது பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத பயணமாக அமைந்து உள்ளது என்றும், பிரான்ஸ் நாட்டின் தேசிய தின அணிவகுப்பில், இந்திய வீரர்கள் கலந்து கொண்டு பெருமை சேர்த்தது அற்புதமான நிகழ்வு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

அது மட்டுமல்லாமல், “இந்த பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து உள்ளது. தேசிய தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததால், இது மேலும் மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. இந்த அணிவகுப்பில் இந்திய அணி வீரர்களும் கலந்து கொண்டு பெருமை சேர்த்ததை பார்த்தபோது அருமையாக இருந்தது.

எல்லையற்ற அரவணைப்பு மற்றும் விருந்தோம்பல் வழங்கியமைக்கு அதிபர் இமானுவேல் மாக்ரோன் மற்றும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா - பிரான்ஸ் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடரட்டும்” என்ற வாழ்த்துகள் உடன் அணிவகுப்பு புகைப்படங்களையும் பிரதமர் மோடி ட்வீட் செய்து உள்ளார்.

முன்னதாக, நேற்று (ஜூலை 14) நடைபெற்ற பிரான்ஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் அதிபர் மாக்ரோன் உடன் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று இருந்தார். இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், இந்திய முப்படைகள் அணிவகுத்துச் சென்ற காட்சி பார்ப்பவர்களின் கண்ணை கவரும் வகையில் அமைந்து இருந்தது. இந்திய விமானப்படையின் (IAF) ரஃபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் ஜெட் விமானங்களுடன் இணைந்து சாகச நிகழ்வுகளில் பங்கேற்றன.

தொடர்ந்து நேற்று இரவு லூவ்ரே அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடிக்கு அதிபர் மாக்ரோன் சிறப்பு விருந்து அளித்தார். அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் மற்றும் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரான் வரவேற்றனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்து உள்ளார்.

இந்தியா - பிரான்ஸ் நாடுகள், தங்களது கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், 25 ஆண்டு கால வரைபடத்தை வெளியிட்ட நிலையில், நட்பு நாடுகளின் நலன் உள்பட முக்கிய ராணுவத் தளங்களின் இணை-வளர்ச்சி மற்றும் இணை உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்து உள்ளன.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 'இந்தியா-பிரான்ஸ் இந்தோ-பசிபிக் சாலை வரைபடத்தை வெளியிட்டு, சுதந்திரமான, திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தங்களது ஸ்திரத் தன்மையை காப்போம் என்று உறுதியளித்தனர்.

பிரான்ஸ் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் பிரதமர் மோடியும், அந்நாட்டு அதிபர் மாக்ரோனும் சிறப்புரையாற்றினர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, இந்தியாவில் நடந்து வரும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டி, இந்தியா வழங்கி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரான்ஸ் நாட்டின் தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விமானம், உற்பத்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரான்ஸ் தரப்பில் இருந்து 16 தலைமை நிர்வாக அதிகாரிகளும், இந்திய தரப்பில் 24 பேரும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துறைமுக நகரமான மார்சேயில் இந்தியா, புதிய தூதரகத்தைத் திறக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details