தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அலபாமா துப்பாக்கிச் சூடு - கால்பந்து வீரர் உள்பட 4 பேர் பலி - 28 பேர் படுகாயம்! - Us Shooting in Party

தனியார் விருந்தில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கால்பந்து வீரர் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Albama private party shooting
Albama private party shooting

By

Published : Apr 17, 2023, 6:20 PM IST

அலபாமா :அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் தனியார் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் கால்பந்து வீரர் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலபாமா மாகாணத்தில் உள்ள டேட்விலி நகரில் கடந்த சனிக்கிழமை இரவு தனியார் விருந்து நடைபெற்றது.

தனது தங்கையின் 16ஆவது பிறந்த நாள் விழா விருந்தில் கலந்துகொள்ள உள்ளூர் கால்பந்து அணியின் வீரர் பில் டோட்வெல் உள்பட ஏறத்தாழ 50 பேர், அந்த விழாவில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விருந்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த நபர், அங்கு குழுமியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடத் தொடங்கி உள்ளார்.

இதில் இளம் கால்பந்து வீரர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 25க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலமாக கிடந்தவர்களை மீட்டும், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கும் அனுப்பினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான கால்பந்து வீரர் பில் டோட்வெல் உயர் நிலை கல்வியை முடித்த நிலையில் அமெரிக்க கால்பந்து அமைப்பின் உதவித்தொகை மூலம் புளோரிடாவில் உள்ள மாகாண கல்லூரிக்கு தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர், கல்லூரியில் சேர இருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், அவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. தனியார் விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்து உள்ளார். துப்பாக்கிச்சூடு மூர்க்கத்தனமானது என்றும்; ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

மேலும் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான கடினமான சட்டதிட்டங்களை விரைவில் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அமெரிக்க மக்கள் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும் என விரும்புவதாகவும்; ஆனால் குடியரசுக் கட்சியினர் துப்பாக்கி வன்முறைகளுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் துணை நிற்பதாகவும் அதிபர் பைடன் குற்றஞ்சாட்டினார்.

அலபாமா மாகாணத்தில் பொது மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அலபாமா மாகாண குடியரசுக் கட்சி ஆளுநர் இரங்கல் சமூக வலைதளம் மூலம் தெரிவித்தார். அதேநேரம் ஆளுநரின் இரங்கலை கண்டித்து துப்பாக்கி கலாசாரத்திற்கு எதிராக வாதாடுபவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :நீச்சலில் அலைபாயும் நடிகர் மாதவனின் மகன் - நாட்டுக்காக 5 தங்க பதக்கங்கள் வேட்டை!

ABOUT THE AUTHOR

...view details