தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 23, 2020, 7:26 PM IST

ETV Bharat / international

ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம்: எஸ்-400 ஏவுகணையை விரைந்து கைப்பற்றுமா இந்தியா?

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். சர்வதேச அளவில் மிக முக்கியமான பயணமாக கருதப்படும் இந்தப் பயணம் குறித்து மூத்த செய்தியாளர் அரூனிம் புயான் ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்!

Rajnath Singh
Rajnath Singh

டெல்லி: லடாக் எல்லையில் இந்திய – சீனப் படைகள் மோதல் வெடித்து பதற்றம் உருவாகியுள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய சென்றிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வகை நீண்ட தூரம் தரையிலிருந்து வான் தாக்குதல் நடத்தும் ஏவுகணையை இந்தியா கொள்முதல் செய்யும் விவகாரம், இந்த பயணத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018ம் ஆண்டு புதுடெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையில் நடந்த இந்திய – ரஷ்ய உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தையில், 5.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த எஸ்-400 ரக ஏவுகணை ஒப்பந்தம் உலக நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் எதிரிகளை எதிர்கொள்ள வகை செய்யும் சட்டத்தை (சிஏஏடிஎஎஸ்ஏ) 2018 ஜனவரி மாதம் அமெரிக்க அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரிய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மற்றும் சிரியாவில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், 2016 அமெரிக்கத் தேர்தலில் தவறான முறையில் தலையிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க செனட்டர்கள் குழு, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

சாதனங்கள்,வரும் அக்டோபர் 2020 தொடங்கி ஏப்ரல் 2023க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், உலகளவில் இந்த சாதனத்திற்கான ஒப்பந்தங்களின் மதிப்பு 16 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருப்பதாதாகக் கூறியுள்ள ரஷ்யா, 2025ஆம் ஆண்டில் அவற்றை விநியோகிப்பதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது லடாக் எல்லையில் இந்திய -சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியால், ஆயுதங்களை விரைந்து ரஷ்யாவிடமிருந்து பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. இதே ஆயுதங்களை ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து சீனா வாங்கிவிட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த திங்களன்று மாஸ்கோ புறப்படுவதற்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள ராஜ்நாத்சிங், “இந்திய -ரஷ்ய ராணுவம் மற்றும் போர்த்திறன் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் ரஷ்யாவும் “சிறப்புமிக்க மற்றும் தனித்துவமான போர்த்திறன் கூட்டுறவை” கொண்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கு தொடர்ந்து ராணுவ தளவாடங்களை ரஷ்யா விநியோகிக்கும்.

ஏற்கனவே எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து சீனா வாங்கியிருப்பதால் இந்தியா மேலும் கவலை கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக, ரஷ்யாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றி அணுவகுப்பின் 75ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் ராஜ்நாத்சிங், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோயிகுவை சந்திக்கிறார். இந்த சந்திப்பில், எஸ்-400 ஏவுகணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஏவுகணைகளை கொள்முதல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதைப் பார்க்கும்போது, எல்லையில் சீனாவுடன் நடக்கும் பூசலுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பது போலத் தோன்றுவதாக, அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“ராஜ்நாத்சிங் ரஷ்யப் பயணத்தின் முழுமுதல் நோக்கம், எஸ்-400 ரக ஏவுகணையை அதிவிரைவில் கொள்முதல் செய்வதாகத்தான் இருக்கும்” என்று, டெல்லியைச் சேர்ந்த போர்த்திறன் விவகாரங்களுக்கான நிபுணர் நிதின் ஏ.கோகலே நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவிக்கிறார்.

ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்தும் ராஜ்நாத்சிங், 2021ம் ஆண்டுக்குள் குறைந்தது இரண்டு ஆயுதங்களையாவது விநியோகிக்குமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பார், என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருநாட்டு ஒப்பந்தத்தின்படி, மொத்தம் ஐந்து ஆயுதங்களை ரஷ்யா விநியோகிக்க வேண்டும். இதற்காக பெருந்தொகைய இந்தியா ஏற்கனவே அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? - இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details