தமிழ்நாடு

tamil nadu

”கரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் உலக சுகாதார அமைப்புடன் இணைய மாட்டோம்" - அமெரிக்கா

By

Published : Sep 4, 2020, 1:27 PM IST

வாஷிங்டன் : உலக நாடுகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு உருவாக்கும் கரோனா தடுப்பு மருந்து சோதனைகளில் அமெரிக்கா பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

US out of WHO-led Covid vaccine effort
US out of WHO-led Covid vaccine effort

கோவிட்-19 தொற்று தற்போது உலகெங்கும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்று காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் பொருளாதார ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கரோனா பரவலைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு, அவசர கால திட்டம் எதையும் முன்னெடுக்கவில்லை என்று அமெரிக்க குற்றம் சாட்டியது.

மேலும், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் உலக நாடுகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு உருவாக்கும் கரோனா தடுப்பு மருந்து சோதனைகளில் அமெரிக்கா பங்கேற்காது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேற ட்ரம்ப் அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. தேவையான முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இது தொர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகெங்கும் உள்ள மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க குடிமக்கள் வரி செலுத்துகின்றனர். ஆனால், உலக சுகாதார அமைப்பு இதில் தோல்வியடைந்துவிட்டது.

கரோனா தவிர மற்ற சுகாதார சிக்கல்களை நிர்வகிப்பதிலும் உலக சுகாதார அமைப்பு தோல்வியடைந்து விட்டது. சீன கம்யூனிசக் கட்சியிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்பட உலக சுகாதார அமைப்பில் முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், நிர்வாக ரீதியாக உலக சுகாதார அமைப்பில் இருந்து முற்றிலும் வெளியேற குறைந்தபட்சம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆகும்.

ஆனால், அதற்குள் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், புதிய அதிபர் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உலக அளவில் ஒரே நாளில் 2 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details