உலகெங்கும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சர்வதேச அளவில் 10இல் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் பல ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் ஒன்பது கரோனா தடுப்பு மருந்துகள் மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை நிலையில் உள்ளது.
அவற்றில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், மற்ற கரோனா தடுப்பு மருந்துகள் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு முதல் மூன்று டோஸ்கள்வரை அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை ஒரு முறை அளித்தாலே போதும், மனிதர்கள் உடலில் தேவையான எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும்.
இந்தச் சூழ்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட நபருக்கு திடீரென்று தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை (அக் 12) அந்நிறுவனம் அறிவித்துள்ளது.