சூடானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பதவி வகித்தவர் ஓமர் அல் பஷீர். இவருக்கு எதிராக இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம், ஓமர் அல் பஷீரை அந்நாட்டு ராணுவம் கைது செய்து, ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது அங்கு, அப்தல் பட்டா அல் பர்கான் தலைமையில் இடைக்கால ராணுவ சபை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு பதிலாக, குடிமக்கள் ஆட்சியமைக்க வலியுறுத்தி மீண்டும் அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. இதனிடையே, ஜூன் 3ஆம் தேதி, ராணுவ அலுவலகம் முன்பாக போராடிக்கொண்டிருந்தவர்களை, அந்நாட்டு ராணுவத்தினர் அடித்து விரட்டினர். இதில், ஏராளமானோர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் கார்டோம் வீதிகளில் போராட்டத்தில் குத்துள்ளனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில், ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் பலியானதாகவும் இடைக்கால ராணுவ சபை அறிவித்துள்ளது. இதனால், அந்நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.