தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 20, 2021, 1:00 PM IST

ETV Bharat / city

Online crime: அரசு வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருட்டு - மூவர் கைது

திருப்பத்தூரில் அரசு கருவூல அலுவலகங்களிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும் பணத்தை ஹேக் (hack) செய்து திருடிய மூவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Online crime: அரசு வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருட்டு: மூவர் கைது
அரசு வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருட்டு: மூவர் கைது

வேலூர்: திருப்பத்தூர் அருகே உள்ள விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் (23). இவர் முதுகலை குற்றவியல் (Criminology) படித்துள்ளார். திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (33). இவர் கணினி மையம் (Computer Centre) நடத்திவருகிறார். இதே கணினி மையத்தில் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவா (22) என்பவர் வேலை பார்த்துவருகிறார். இவர்கள் மூவரும் சேர்ந்து கருவூல அலுவலகங்களிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வழங்கப்படும் நிதியை ஆன்லைன் மூலம் திருட முடிவுசெய்தனர்.

இதற்காக, ஆன்லைனில் மோசடி செய்துவரும் பிரபல நபர் ஒருவரை இவர்கள் நாடியுள்ளனர். மோசடி நபர் மூலம் அவர்கள் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வங்கி பண பரிமாற்ற ரகசிய எண், காட்பாடி சார்நிலைக் கருவூல அலுவலகத்தில் உள்ள பணப்பரிமாற்ற ரகசிய எண் ஆகியவற்றை ஹேக் (Hack) செய்து திருடியுள்ளனர்.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி ரகசிய எண்களைக் கொண்டு ஆன்லைன் மூலம் காட்பாடி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 70 லட்சம் ரூபாயை இரண்டு தவணைகளாக அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர்.

பணம் காணாமல்போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு இது குறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக ரகசிய விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் கருவூல அலுவலகத்திலிருந்து பணப்பரிமாற்றம் நடந்த தகவல்களைச் சேகரித்தனர். அப்போது, திருப்பத்தூரைச் சேர்ந்த பூவரசனின் வங்கிக் கணக்கிற்கு 50 லட்சம் ரூபாய் மாறியிருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தப் பணத்தை பூவரசன் எடுக்க முடியாமல் திணறி உள்ளார். மேலும் கடந்த நவம்பர் 17 அன்று 25 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட காவல் துறையினர் பூவரசனைக் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து பிரபு, ஜீவா ஆகியோரையும் பிடித்தனர். காவல் துறையினரின் விசாரணையில், மோசடி நபர் ஒருவருடன் சேர்ந்து இவர்கள் அரசுப் பணம் ரூ.70 லட்சத்தை திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைதுசெய்தனர்.

மேலும், அவர்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ரூ.70 லட்சத்தைப் பறிமுதல்செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த மோசடி நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி கணக்கை ஹேக் செய்த சொந்த கட்சி நிர்வாகி கைது!

ABOUT THE AUTHOR

...view details