மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். முன்னதாக திருச்சி பாலக்கரையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிராக நடக்கும் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் பிரதமருக்குக் கடிதம் எழுதிய தமிழ்த் திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் உட்பட 49 பேர் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை போன்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்து கொள்ளப்படும். நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பிரசாரம் செய்துவருகிறது.
மத்திய அரசின் நீட் தேர்வு முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பது போன்ற காரணங்களுக்காக வரும் இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்குமக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி இடைத்தேர்தலில் தேர்தலில் அமோக வெற்றிபெறும். இந்த தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழியை உருவாக்கும் எனத் தெவித்தார்.