திருச்சிராப்பள்ளி:சென்னை புறப்படவிருந்த இண்டிகோ விமானிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், விமானம் ரத்து செய்யப்பட்டது.
இரு தினங்களாக நிவர் புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது. இச்சூழலில் இன்று காலை 8.15 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் 68 பயணிகளுடன் வந்தது. பின்பு இந்த விமானம் சென்னை புறப்படுவதற்கு தயாராக இருந்தது.
அப்போது தொழில்நுட்ப காரணங்களால் விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்கான 58 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இவ்வேளையில் சுமார் 42 பயணிகள் மும்பை, டெல்லிக்கு தொடர் பயணம் செய்ய இருந்த காரணத்தினால், ஹைதராபாத் செல்லும் விமானம் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதம் இருந்த பயணிகள் மாலை சென்னை நோக்கி செல்லவிருக்கும் விமானத்திற்கு மாற்றுப் பதிவு செய்துகொண்டனர். இதனால் பயணிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டது.
இண்டிகோ விமானத்தை இயக்க இருந்த விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக அவர் திருச்சியிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே விமானத்தில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார். அவரும் காலை பயணம் செய்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். விமானம் ரத்து செய்யப்பட்ட தகவல் அறிந்து அவர் புதுக்கோட்டைக்கு திரும்பிச் சென்றார்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக கலந்துகொள்வதாக இருந்தது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு ஆறாம் இடம் பிடித்ததற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் விருது பெறுவதாக இருந்தது.
விமானம் ரத்து செய்யப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்.