தமிழ்நாடு

tamil nadu

மது வாங்குவதில் தகராறு - மீன் வியாபாரி அடித்துக் கொலை

By

Published : Jul 28, 2020, 9:08 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரிடம், மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மீன் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

murder
murder

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் ஆரோக்கிய மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம் (46). இவர் கயத்தார் காவலர் குடியிருப்பு அருகே மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று (ஜூலை 27) தளர்வு இல்லாத ஊரடங்கு என்பதால் சந்தானம் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில், நேற்றிரவு ஒன்பது மணியளவில் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கயத்தார் கடம்பூர் சாலைப்பகுதியில், சங்கிலி பாண்டியன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. அங்கு சென்ற சந்தானம் 100 ரூபாய் கொடுத்து மது கேட்டுள்ளார், நூறு ரூபாய்க்கு மது விற்கப்படுவதில்லை என சங்கிலி பாண்டியன் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த சந்தானம் சங்கிலி பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அங்கிருந்த காளிமுத்து, சுடலை கண்ணு, விஜயகுமார் உள்ளிட்டோர் சங்கிலி பாண்டியுடன் சேர்ந்து சந்தானத்தை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த சந்தானம் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் சந்தானத்தை மீட்டு வீட்டின் அருகே விட்டுச் சென்றனர். ஆனால், அவர் வீட்டிற்கு செல்லாமல் அருகே உள்ள திண்ணையில் உறங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 28) காலை அடிபட்ட காயத்துடன் வீட்டிற்கு சென்ற சந்தானத்தை பார்த்து அவரது மனைவி அதிர்ந்து போனார். என்ன நடந்தது என்று கேட்பதற்குள், சந்தானம் மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்தார். இதனையடுத்து, கயத்தார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், சந்தானத்தை தாக்கி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி, அவரை உடலை வாங்க மறுத்த உறவினர்கள் கயத்தார் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைகதிரவன் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார். இதன்பின்னர் உறவினர்கள் கலைந்துச் சென்றனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காளிமுத்து, சுடலைகண்ணு ஆகியோரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:'ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் மாஸ்க் வழங்கப்படும்' - அமைச்சர் காமராஜ்

ABOUT THE AUTHOR

...view details