தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2020, 5:09 PM IST

Updated : Nov 23, 2020, 5:33 PM IST

ETV Bharat / city

தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

நெல்லை: சகோதரர் மகன் தன்னை கடத்தி கொலைசெய்ய முயன்றதாக ஐஜியிடம் புகார் அளித்த நிலையில் தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

business man
business man

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன். பிரபல தொழிலதிபரான இவர் விவி மினரல் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்திவருகிறார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இவருக்குச் சொந்தமாகப் பல்வேறு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

இவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணலை எடுத்து விற்பனை செய்ததாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில் தனது சகோதரர் மகன் தன்னை காரில் கடத்தி கொலைசெய்ய முயற்சித்ததாக சில தினங்களுக்கு முன்பு நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவிடம் புகார் அளித்தார்.

அதாவது வைகுண்டராஜனுக்கும் அவரது சகோதரருக்கும் இடையே பல ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்துவருகிறது. இந்த நிலையில் அவரது சகோதரர் மகன் செந்தில்குமார் என்பவர் 15 நபர்களைக் கொண்டு தினமும் வைகுண்டராஜனை பின் தொடர்ந்து அவர் எங்கெல்லாம் செல்வார் என்று நோட்டமிடுவதாகப் புகார் அளித்தார்.

மேலும் அதுதொடர்பாக தனனிடம் 35 வீடியோக்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். டிஐஜியிடம் புகார் அளித்த முந்தைய தினம் தன்னை பின்தொடர்ந்த 2 நபர்களை கையும் களவுமாகப் பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், ஆனால் காவல் துறையினர் சில மணி நேரத்தில் அவர்களை விட்டுவிட்டதாகவும் டிஐஜியிடம் வைகுண்டராஜன் முறையிட்டார்.

மேலும் தனக்குப் பாதுகாப்பு வழங்குவதுடன் தன்னைப் பின்தொடர்ந்து வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து வைகுண்டராஜனுக்கு காவல் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசித்துவந்தது. இந்தச் சூழ்நிலையில் தற்போது அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தினமும் நான்கு காவலர்கள் வைகுண்டராஜனுக்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர். இதில் 2 பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ஆவர். பகலில் இரண்டு காவலர்கள் இரவில் இரண்டு காவலர்கள் என நான்கு பேர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

Last Updated : Nov 23, 2020, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details