சேலம்:சேலம் மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 3) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கட்சியினருடன் பொன். ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெறும். மக்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது.
எப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும். அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு இந்த விஷயத்தில் எந்த வகையில் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறது என்பதை ஸ்டாலின் விளக்கமாகச் சொன்னால் நல்லது. ஏற்கனவே தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்த ஸ்டாலினுக்கு, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில், அவர்கள் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரியாதா?
புத்தாண்டு மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது?
திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த காலத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் என்ன நல்லது செய்தார்கள்? தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராமல் தமிழை வைத்து திமுக 1967ஆம் ஆண்டுமுதல் பிழைப்பு அரசியல் நடத்துகிறது.