தமிழ்நாடு

tamil nadu

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி வழக்கு: சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதி

By

Published : Sep 3, 2021, 5:54 PM IST

பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' எவ்வாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

helicopter brother money fraud
helicopter brother money fraud

மதுரை: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் பண மோசடி வழக்கு விசாரணை குறித்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில் பண மோசடி வழக்கில் ஏழு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள அகிலாண்டம், நிதி நிறுவன அலுவலகப் பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மனு தாக்கல்செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது பண மோசடி குறித்து 35-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.

மேலும், தற்போது கணேசன், சுவாமிநாதன் தனியார் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதால் பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அகிலாண்டத்திற்கு மூன்றரை வயதில் குழந்தை உள்ளதால், அவரைப் பராமரிக்க வேண்டும் என்பதால் நிபந்தனை பிணை வழங்க வேண்டும் என வாதிட்டார். மேலும் அலுவலகப் பணியாளர் வெங்கடேசன் வயது முதிர்வு காரணமாக பிணை வழங்கக் கோரி மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, "நிதி நிறுவனத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் உள்ளனர், மேலும் பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் எவ்வாறு தனியார் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சைப் பெற்றுவருகின்றனர், தற்போது பண மோசடி வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நிதி மோசடி தொடர்பாக ஆவணங்களை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details