தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மாநகராட்சி பொறியாளர் அரசு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிபதி கேள்வி

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய மதுரை மாநகராட்சியின் தலைமை செயற்பொறியாளராக இருந்த அரசு என்பவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மதுரை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

By

Published : Aug 18, 2021, 8:10 PM IST

மதுரை
மதுரை

மதுரை : லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய மதுரை மாநகராட்சியின் தலைமை செயற் பொறியாளராக இருந்த அரசு என்பவர் மீது ஏன் துறை ரீதியாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையை சேர்ந்த அரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 1993இல் மதுரை மாநகராட்சியில் ஆய்வாளராக பணியில் சேர்ந்த நிலையில், அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று 2018ஆம் ஆண்டு நகர தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்றேன்.

பதவியேற்று ஒரு மாதத்தில் தனது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை என் அறையில் இருந்த ஒரு பையிலும், 73 ஆயிரம் ரூபாயை தனியாகவும், வெள்ளி நாணயங்களையும் கைப்பற்றினர். இந்நிலையில் எனது அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பணம் உடன் பணிபுரிந்த சிலர் வட்டிக்கு கடனாக பெற்று வைத்திருந்த தொகை.

நீதிமன்ற உத்தரவு

அதோடு வெள்ளி நாணயங்களும் அலுவலகப் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டவை. இது தொடர்பான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. 2019 நவம்பர் மாதம் மதுரை மாநகராட்சி ஆணையர் இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் என்னை கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மாநகராட்சியின் பொறியாளராக இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதமானது. நான் எவ்விதமான தவறும் செய்யாத நிலையில் என்னை பதிவிறக்கம் செய்தது ஏற்றுக்கொள்ள இயலாதது. ஆகவே மீண்டும் நகர் தலைமை பொறியாளராக பதவி உயர்வு செய்து உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி மனுதாரர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

மேலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் இதுவரை இவர் மீது ஏன் துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை யின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க : விஷாலுக்கு எதிரான வழக்கு- லைகா நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details