மதுரை: இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து இட ஒதுக்கீட்டுத் திட்டங்களில் விதி மீறல்களை செய்து வருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இன்று (ஜூலை 22)அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “மக்களவையில் ஐ.ஐ.டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர் விண்ணப்பித்தார்கள்? இட ஒதுக்கீடு பிரிவினருக்கான இடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன? என்ற கேள்வியை நான் எழுப்பி இருந்தேன்.
அதற்கான 29 பக்கங்கள் கொண்ட பதிலை ஒன்றிய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் அளித்துள்ளார். அதில் தரப்பட்டுள்ள தகவல்கள் எப்படி முனைவர் பட்ட அனுமதிகள் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு அநீதியை இழைக்கின்றன என்பதை விவரிக்கிறது. இட ஒதுக்கீடு அடியோடு சிதைக்கப்பட்டுள்ளது.
போதுமான விண்ணப்பதாரர்கள் இருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. வழக்கமாக அரசு சொல்லும் காரணமும் இங்கே அடிபட்டு போயிருக்கிறது.
இட ஒதுக்கீடு நெறிகளின்படி ஐ.ஐ.டி க்கள் எஸ்.டி 7.5 விழுக்காடு, எஸ்.சி 15 விழுக்காடு, ஓ.பி.சி 27 விழுக்காடு இடங்களை தந்திருக்க வேண்டும். அமைச்சர் தந்துள்ள தகவல்களின்படி எஸ்.டி பிரதிநிதித்துவம் 2.5 விழுக்காடாகவே இருக்கிறது. 3430 விண்ணப்பதாரர்கள் இருந்தும் எல்லா ஐ.ஐ.டி-களிலும் சேர்த்து மொத்தம் 137 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. எந்த ஐ.ஐ.டி-யுமே உரிய பிரதிநிதித்துவத்தைத் தரவில்லை. மூன்று ஐ.ஐ.டி-க்களுக்கு (கோவா, பிலாய், திருப்பதி) முறையே 30, 31, 93 விண்ணப்பங்கள் வரப்பெற்றும் அவர்கள் அனுமதி தந்தது ஜீரோ விழுக்காடு.
எஸ்.சி பிரதிநிதித்துவம் 10 விழுக்காடாகவே இருக்கிறது. 17075 விண்ணப்பதாரர்கள் இருந்தும் எல்லா ஐ.ஐ.டி-களிலும் சேர்த்து மொத்தம் 574 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. எல்லா ஐ.ஐ.டிகளுமே- கோவா, தன்பாத் தவிர - உரிய பிரதிநிதித்துவத்தை பட்டியலினத்தோருக்குத் தரவில்லை.
சென்னை ஐ.ஐ.டியில் எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் முனைவர் பட்ட அனுமதிகளில் மிக மிகக் குறைவாக உள்ளது. மொத்தம் 558 மாணவர்கள் முனைவர் பட்ட அனுமதிகளைப்பெற்றுள்ள நிலையில் 53 மாணவர்கள் மட்டுமே (9.5 சதவீதம்) எஸ்.சி பிரிவைச்சார்ந்தவர்கள். 20 பேர் மட்டுமே (3.6 சதவீதம்) எஸ்.டி பிரிவைச்சேர்ந்தவர்கள். ஆனால், எஸ்.சி மாணவர்கள் 1637 பேரும், எஸ்.டி மாணவர்கள் 346 பேரும் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களாக இருந்துள்ளனர். எஸ்.சி மாணவர் இடங்கள் 23, எஸ்.டி மாணவர் இடங்கள் 13 காலியாக விடப்பட்டுள்ளன.