தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 30, 2021, 9:56 PM IST

ETV Bharat / city

நீர்நிலைகள் அழிக்கப்படுவதை இனியும் ஏற்க முடியாது - நீதிபதிகள் கண்டிப்பு

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியில் மின் மயானம் அமைக்க தடைகோரிய வழக்கு விசாரணையின்போது, பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன; இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது
இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது

மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் தாக்கல்செய்த பொதுநல மனுவில், "மதுரை கற்பகநகர், சங்கர் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகின்றன. மேலும் இப்பகுதியில் உயர் நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்பு, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.

ஏற்கெனவே இப்பகுதியில் உள்ள மயானங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாநகராட்சியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மதுரை மாநகராட்சி தனியார் நிதி உதவியுடன் மின் மயானம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். மேலும் மயானம் அமைக்கும் பகுதியானது புதுக்குளம் கண்மாய்.

இதுபோன்று நீர்நிலைகளில் ஆக்கிரமித்து மாநகராட்சி சார்பில் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதுக்குளம் கண்மாய்க்குள்பட்ட பகுதியில் புதிய கட்டுமானங்கள் கட்டக் கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது.

எனவே புதுக்குளம் கண்மாயில் அமைய உள்ள மின்சார மயானம் கட்டுவதற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

இது குறித்து உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கக் கூடாது என உத்தரவு உள்ளது. எனவே மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மனு குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details