தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 7, 2021, 1:58 PM IST

ETV Bharat / city

யுஜிசி நிதியில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் முறைகேடு: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கல்லூரிக்கு வழங்கப்படும் யுஜிசி நிதியில் முறைகேடு செய்ததாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் யுஜிசி செயலர், சிபிஐ இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரி இணைப் பேராசிரியர் பிரேம்சிங், சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "அமெரிக்கன் கல்லூரி முதல்வராக தவமணி கிறிஸ்டோபர் உள்ளார். இவரது நியமனத்திற்குப் பிறகு, அதிகளவிலான நிதி முறைகேடுகள் நடந்துள்ளன.

யுஜிசி நிதியுதவியுடன் நடத்தப்படும் பிவிஓசி (வொகேஷன்) பாடப்பிரிவில் அதிகளவில் நிதி கையாடல் நடந்துள்ளது. இது குறித்து நான் ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலருக்கு அளித்த புகார் மனு யுஜிசி செயலருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இவர்களெல்லாம் பதிலளிக்க வேண்டுமாம் - உத்தரவிட்ட நீதிமன்றம்

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளரும் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. 2018-19ஆம் கல்வியாண்டில் 75 லட்சத்து 78 ஆயிரத்து 400 ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதில், 73 லட்சத்து இரண்டாயிரத்து 760 ரூபாய் வரை தவறாகக் கையாளப்பட்டுள்ளது.

இதேபோல் யுஜிசி நிதி மூன்று லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முறைகேடாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, யுஜிசி நிதி முறைகேடு குறித்து சிபிஐ உள்ளிட்டோர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வுசெய்யுமாறும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, யுஜிசி செயலர், கூடுதல் செயலர், சிபிஐ இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தியாகத் தலைவர்களை சாதி ரீதியாக அடையாளப்படுத்தாதீங்க!

ABOUT THE AUTHOR

...view details