தமிழ்நாடு

tamil nadu

திமுக - பாஜக மோதல்; தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல்!

By

Published : Apr 1, 2021, 10:09 AM IST

செய்தி சேகரிக்க வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ரவீந்தரனை திமுக நிர்வாகிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவர், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.

தாக்கப்பட்ட செய்தியாளர்
தாக்கப்பட்ட செய்தியாளர்

கோயம்புத்தூர்: திமுக - பாஜக மோதலை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தெலுங்குபாளையம் அருகே காரில் வந்த நபர்கள் வாக்காளர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சீட்டுடன் இணைத்து பணம் பட்டுவாடா செய்ய வந்ததாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற திமுகவினர் காரை சிறைபிடித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தேர்தல் அலுவலர்கள், விசாரணை மேற்கொண்டு காரை பறிமுதல் செய்து பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

வட்டாச்சியர் அலுவலகத்தில் தொண்டாமுத்தூர் தேர்தல் அலுவலர் செந்தில் அரசன் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் காரை சோதனையிட்டனர். அப்போது புகார் அளித்த திமுக நிர்வாகிகள் முன்னிலையில் சோதனை செய்ய வேண்டும் என திமுக வழக்கறிஞர் உள்ளே வந்த போது, தேர்தல் பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அங்கு வந்த கார் உரிமையாளர் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து புகார்தாரர் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் காரை சோதனையிட்டு உள்ளே இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், பேரூர் வட்டாசியர் அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர் யார் புகார் அளித்தது என கேட்டு காவல்துறையினரிடமும், தேர்தல் பணியாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வளாகத்திற்கு வெளியே வந்து திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது செய்தி சேகரிக்க வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ரவீந்தரனை திமுக நிர்வாகிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்கப்பட்ட செய்தியாளர்

இதில் காயமடைந்த அவர், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இரு தரப்பினரும் கலைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details