தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறை: சிறிய கட்சிகளுக்குச் சிக்கலா?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் திருத்தம் செய்யப்பட்ட புதிய விதிமுறையின்படி அரசியல் கட்சிகள் 5% சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பதிவுசெய்யப்பட்ட பொதுச்சின்னம் உபயோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Feb 21, 2021, 9:41 PM IST

Published : Feb 21, 2021, 9:41 PM IST

Election Commission New Rule
Election Commission New Rule

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் சூழ்நிலையில் இருபெரும் திராவிட கட்சிகள் முன்கூட்டியே பரப்புரையை ஆரம்பித்து நடத்தி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யக் கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. தேர்தல் ஆணைய புதிய விதியால் இரு பெரும் திராவிட கட்சிகளில் உள்ள சிறிய கட்சிகள் திடீர் கலக்கமடைந்துள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள 234 தொகுதிகளில் கூட்டணியின் பெரிய கட்சிகள் 170 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட்டு, மீதமுள்ள தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளின் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் தாமக, புதிய நீதிகட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.

இரண்டு பெரிய திராவிட கட்சிகள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒற்றை எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இரண்டு கட்சிகளும் உள்ளன. கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தி தங்கள் சின்னத்தில் நிற்க வைக்கவும் திரைமறைவு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தங்களின் சின்னத்தில் நிற்க வைப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும், பின் வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு கை கொடுக்கும் என அரசியல் கட்சிகள் கணக்கு போடுகின்றது.

இது குறித்து கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவர் தனியரசு, சிறிய கட்சிகளை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் இது போன்ற நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்கு உரியது எனவும், பழைய நடைமுறை தொடர்வதற்கான உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினார்.

மேலும் இது குறித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் இது போன்ற உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும், நீதிமன்றத்தை நாடி தேர்தல் ஆணைய உத்தரவிற்குத் தடை உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கை தொடங்குவதற்கும் தயாராக இருக்கிறோம்.

டிஜிட்டல் மய உலகில் சின்னங்களை ஒரு மணி நேரத்தில் பிரபலப்படுத்த முடியும், இருந்தாலும் விசிகவின் சின்னத்தில் அனைத்து தொகுதிகளில் போட்டியிட முயற்சி செய்வோம் எனத் தெரிவித்தார்.

அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் யுவராஜ் இது குறித்துப் பேசிய போது, தேர்தல் ஆணைய உத்தரவின்படி 12 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை அதிமுக கூட்டணி கட்சியிடம் பேசி முடிவு எடுக்கப்படும். அதேபோல் தொகுதி எண்ணிக்கை குறித்து தலைமை எடுக்கும் முடிவு இறுதியானது எனத் தெரிவித்தார்.

சிறிய கட்சிகள் கூட்டணியின் பெரிய கட்சி சின்னத்தில் போட்டியிடுமா அல்லது தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற பொதுச்சின்னத்தை பெற்று களம் காணுமா என்பது தேர்தல் அறிவிப்புக்கு பின்தான் தெரியும், பொறுத்து இருந்து பார்க்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details