சென்னை:சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.25) தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த முன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அனைத்துக் கட்சி தலைவர்களும், மசோதா மீது தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினர். அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.
இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவர் பேசியது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். பின்னர் மீண்டும் செல்வப்பெருந்தகை பேச தொடங்கியபோது, அதிமுகவினர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக திமுக உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, யார் பேசியதும் அவை குறிப்பில் இடம்பெறாது, அதிமுக உறுப்பினர்கள் இருக்கையில் அமர வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது எழுந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், சபாநாயகர் 2, 3 முறை கூறிய பின்பும் அதிமுக உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்லாமல் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், உறுப்பினர்கள் பேசினார்களா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை என்றும், அவர்கள் பேசிய எதுவும் அவை குறிப்பில் ஏறவில்லை என்றும், இருப்பினும் அதிமுகவினர் வெளியே செல்வதற்கு காரணத்தை தேடிக் கொண்டிருப்பதாகவும், இந்த சட்ட மசோதாவை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் கூறினார்.