சென்னை: சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்திலுள்ள ஆவின் பாலகம் எதிரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. அவர்கள், “தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினர்.