தமிழ்நாடு

tamil nadu

திரையரங்குகளுக்கு மற்றொரு தலைவலி - கவலையில் திரையரங்கு உரிமையாளர்கள்!

திரையரங்குகளுக்கு ஏற்கனவே ஓடிடி தலைவலி கொடுத்துக் கொண்டிருக்க தற்போது டிவியும் சேர்ந்து தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் தலைவலியில் உள்ளனர்.

By

Published : Sep 1, 2021, 10:32 PM IST

Published : Sep 1, 2021, 10:32 PM IST

Updated : Sep 2, 2021, 6:24 AM IST

theatres are under struggle
theatres are under struggle

கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டது மட்டுமல்லாமல் பல துறைகளை அடியோடு அழித்துவிட்டன. அதில் மிகப்பெரிய இழப்பை சினிமா துறை சந்தித்துள்ளது.

கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்தத் தொழில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஆட்டம்கண்டு நிற்கிறது. அதிலும் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த திரையரங்கு உரிமையாளர்களை அசைத்துப் பார்த்துவிட்டது.

திரையரங்கின் பயணம்

முன்பெல்லாம் ஒரு படம் திரையரங்குகளில் வெளியானால் அது முதலில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் வெளியாகும்.

பின்னர் அப்படியே கொஞ்ச நாள்கள் கழித்து சிறுநகரங்கள், அதன் பிறகு பல மாதங்கள் கழித்துத்தான் கிராமங்களுக்கு வந்துசேரும்.

கிராமத்தில் ஒரு நடிகர் நடித்த படம் வெளியிடப்படும் போது சென்னையில் அந்த நடிகரின் அடுத்த புதுப்படம் வெளியாகிவிடும். அப்படி இருந்தது அன்றைய நிலவரம். ஆனால் இந்த கரோனாவால் திரையரங்குகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன.

இடையில் திறந்தாலும் அது முழுமையானதாக இல்லை. இதனால் இரண்டாயிரம் கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பு தெரிவிக்கிறது.

ஓடிடி வருகை

கரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருந்தவர்களுக்கு நல்வாய்ப்பாக வந்தது ஓடிடி தளங்கள். வீட்டில் இருந்துகொண்டே உள்ளூர் முதல் உலகப் படங்கள் வரை பார்க்கும் வசதியை ஓடிடி தளங்கள் ஏற்படுத்திக்கொடுத்தன.

எந்த மொழி படமாக இருந்தாலும் விரல் நுனியில் வந்திறங்கின. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட ஆரம்பித்தனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அந்த நடிகர்கள் மீதும், தயாரிப்பாளர் மீதும் அதிருப்தியிலிருந்தனர்.

ஆனால் ஓடிடி தளங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு முன்னணி நடிகரே இப்படி ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கலாமா எனப் புலம்பி தவித்தனர் திரையரங்க உரிமையாளர்கள்.

இவை அனைத்தையும் தாண்டி, ஓடிடி தளங்கள் வளர்ந்துகொண்டே இருந்தன. ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கு இந்த ஓடிடி தளங்கள் தலைவலியாக இருக்க, தற்போது புதிதாக தொலைக்காட்சி சேனல்களும் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளன.

தொல்லையான தொலைக்காட்சி

இவர்கள் கரோனாவை காரணம் காட்டி திரைக்கு வராத படங்கள் எனப் படங்களைத் திரையிட ஆரம்பித்துள்ளனர். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மற்றுமொரு இடியாக உள்ளது.

முன்பெல்லாம் திரையரங்குகளில் ஒரு படம் வெளியானால், அதனை எதாவது பண்டிகை நாள்களில் மட்டுமே தொலைக்காட்சியில் வெளியிடுவார்கள். அதுவும் படம் வெளியாகிப் பல மாதங்கள் கழித்து. மாலை நேரம் அந்த படங்களை பார்த்துவிட்டு தான் பண்டிகையே நிறைவு பெறும் மக்களுக்கு.

நாள்கள் செல்ல சொல்ல அவை அப்படியே மாறி "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாகத் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்" எனப் படம் திரையரங்குகளில் வெளியாகி சில மாதங்களிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

நேரடியாக தொலைக்காட்சிக்கு செல்லும் சினிமா

தொலைக்காட்சி உரிமம் எனத் தயாரிப்பாளருக்கு அதில் ஒரு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். ஆனால் இந்த கரோனா இதிலும் புகுந்து விளையாடியது. திரையரங்குகளில் வெளியாகி பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் படங்களை நேரடியாக டிவியில் வெளியிடும் வழக்கத்தை கரோனா உருவாக்கிவிட்டது.

காரணம் திரையரங்குகள் மூட்டப்பட்டிருப்பது தான் எனச் சொல்லப்படுகிறது. எப்படி ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகிறதோ, அதே போன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியிடுகிறார்கள்.

இதனால் தயாரிப்பாளருக்கு உடனடியாக பணம் கிடைத்துவிடுகிறது. திரையரங்குகளில் வெளியிட்டுப் படத்தின் வரவேற்பு, வசூல் என்ன என்பதை அறியக் காத்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

வரிசை கட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் படங்கள்

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ஓடிடியில் படங்கள் வெளியாவது குறையவில்லை. அதேபோல் நேரடி டிவி வெளியீட்டுக்கும் முன்னணி நடிகர்களின் படங்களே வரிசை கட்டி நிற்கின்றன.

யோகிபாபுவின் நாங்க ரொம்ப பிஸி, விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி, ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா, சமுத்திரக்கனியின் ஏலே உள்ளிட்ட படங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின.

வரும் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், சந்தானத்தின் டிக்கிலோனா ஆகிய படங்கள் நேரடியாக டிவியில் வெளியாகின்றன. இதனால் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி வருவது கேள்விக்குறியாக உள்ளது.

ரசிகனின் நம்பிக்கை

என்னதான் புதிய புதிய வசதிகள், தொழில்நுட்பங்கள் வந்தாலும் திரையரங்கு தருகின்ற உணர்வை வேறு எங்கேயும் அனுபவிக்க முடியாது என்பதே நிதர்சனம். இவை எல்லா தடங்கல்களையும் கடந்து திரையரங்கு தன்னை மீட்டெடுக்கும் என்பதே உண்மையான ரசிகனின் நம்பிக்கையாக உள்ளது.

Last Updated : Sep 2, 2021, 6:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details