தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி: சீமான் விமர்சனம்

சென்னை: தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

man

By

Published : Mar 19, 2019, 2:06 PM IST

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தனது கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நாம் தமிழர் கட்சி 18 தொகுதி நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது.

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு இடைத்தேர்தலை சந்திப்போம். மயில் சின்னத்தை கேட்டிருந்தோம், ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை கொடுத்துள்ளது. விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கவே எங்களுக்கு இந்த சின்னம் கிடைத்துள்ளது.

மார்ச் 22ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்பட்டபின் எங்களுடைய வேட்பாளர்களை மார்ச் 23 ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் வைத்து ஒட்டுமொத்தமாக அறிவிப்போம். 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெண் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என போராடிவரும் நாங்கள் எங்கள் கட்சி மூலம் அதை முதலில் கொண்டு வருவோம். இடைத் தேர்தலில் சரிபாதி உரிமை பெண் வேட்பாளர்களுக்கு அளிப்போம்”என்றார்.

அதன்பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், கவுண்டமணி நகைச்சுவையை சுட்டிக்காட்டி "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா" என்றார். தி.மு.க தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது குறித்து பதிலளித்த அவர், இதை முன்பே செய்திருக்க வேண்டும் எனவும் இனியாவது இதை நிறைவேற்ற அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில் ”ஹிந்தி தெரிந்தவர் மட்டுமே பிரதமராக முடியும் என்ற முறையை மாற்ற வேண்டும். சுழற்சி முறையில் பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்க வேண்டும்.

நாட்டிற்காக போராடும் வீரர்களின் உயிரை அப்பட்டமாக பலி கொடுத்துள்ளது இந்த அரசு. கோயில்களில் ஆடு, மாடுகளை பலி கொடுப்பதுபோல ராணுவ வீரர்களின் உயிரை பாஜக அரசு பலிகொடுத்துள்ளது. எத்தனையோ உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் 1 கி.மீ. தூரம் வரை பயங்கரவாதிகள் எவ்வாறு நுழைந்திருக்க முடியும்?

நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்களையும், ரஃபேல் விமான கோப்புகளையும் பாதுகாக்க முடியாத அரசு எப்படி நாட்டின் பாதுகாவலர்கள் (சௌகிதார்) என கூறிக் கொள்ள முடியும். பொள்ளாச்சி சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் எவ்வாறு பேச இயலும். அதற்காக போராடுபவர்களையே தேர்தலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை பாதிக்கும் என்பதற்காக ஒடுக்கி வருகிறது இந்த அரசு.

சமரசம் இல்லாத தலைவரையே நாங்கள் எதிர்பார்த்தோம், எனவே கூட்டணிக்கு அழைத்தவர்களை புறக்கணித்தோம். சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல் என்ற கொள்கையை கொண்டதால் எங்கள் கட்சி கூட்டணியை புறக்கணித்து தனித்து போட்டியிட முடிவெடுத்தது.

தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி, ஒப்புக்காக விதிகளை விதித்துவிட்டு அதை கடைபிடிக்க மறுக்கிறது. ஏழு தமிழர்களை எப்போதோ விடுதலை செய்திருக்க முடியும், அதற்கான திறன் மாநில அரசிடமிருந்தும் ஆட்சியாளர்கள் வாய்திறக்கவில்லை, தற்போது ஏழு தமிழர் விடுதலை பற்றி பேசுவது கண் துடைப்பு என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

முகிலன் மாயமானது மூலம் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு நிலை குறித்து இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். சமூகத்திற்காக போராடும் சமூக செயற்பாட்டாளருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில்தான் இந்த நாட்டின் பாதுகாப்பு அரண் உள்ளது ”என்றார்.

ABOUT THE AUTHOR

...view details