தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2021, 2:25 PM IST

ETV Bharat / city

'மேகதாது அணை விவகாரத்தில் கோட்டைவிட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்

மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கோட்டை விட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

'மேகதாது அணை விவகாரம்: கோட்டை விட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்
'மேகதாது அணை விவகாரம்: கோட்டை விட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்

சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது.

இது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவாகும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூரில் நேற்று அறிவித்திருக்கிறார்.

மேகதாது அணை

கோட்டை விட்ட தமிழ்நாடு அரசு

கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். அது சரியானது தான் என்றாலும் கூட, அதை விட மிகவும் முக்கியமான விஷயத்தை தமிழ்நாடு அரசு கோட்டை விட்டு விட்டது. இன்னும் கேட்டால் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு தான், மத்திய அரசின் அனுமதியைப் பெற்று அணையை கட்டுவோம் என்று கூறும் துணிச்சலை எடியூரப்பாவுக்கு அளித்துள்ளது.

மேகதாது அணை தொடர்பான அனைத்து விவகாரங்களும் உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் நிலுவையில் உள்ளன என்பதை மட்டும் தான் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கருத்தில் கொண்டதே தவிர, மேகதாது அணையை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டதா? அதனால் சுற்றுசூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொள்ளவில்லை.

பாமக நிறுவனர் ராமதாஸ்

கர்நாடகம் மேற்கொண்ட அத்துமீறல்கள்

இந்த விஷயத்தை வலியுறுத்தி வெற்றி பெற தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தவறி விட்டார். இது தொடர்பான வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு முடித்து வைத்து விட்டதால், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேற்கொண்ட அத்துமீறல்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு விட்டன. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டத்தை மதிக்கவில்லை என்று நிரூபிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு தவறிவிட்டது.

மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதி அளிக்காத நிலையில், அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கர்நாடகம் செய்திருந்தால் அது மிகப்பெரிய விதிமீறல் ஆகும். மேகதாது அணை தொடர்பான வழக்கில் அது தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறுவதற்கு உதவும்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

கர்நாடக அரசின் விதிமீறலை உறுதி செய்வதற்காக மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தேர்ந்தெடுத்துள்ள பகுதியை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். எனவே, மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழு அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மேகதாது அணை கட்டப்படும்- எடியூரப்பா!

ABOUT THE AUTHOR

...view details