தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2022, 3:28 PM IST

ETV Bharat / city

ராஜிவ்காந்தி மருத்துவமனை அம்மா உணவக சமையலறையில் இறந்துகிடந்த பெருச்சாளி - நடவடிக்கை உண்டா?

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அம்மா உணவக சமையலறை அருகே இறந்த நிலையில் பெருச்சாளி கிடந்த சம்பவம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுகாதாரமற்ற மருத்துவமனை குறித்த சிறு தொகுப்பைக் காணலாம்.

அம்மா உணவகம் சமயலறையில் இறந்த நிலையில் பெருச்சாளி
அம்மா உணவகம் சமயலறையில் இறந்த நிலையில் பெருச்சாளி

சென்னை: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு பொது மருத்துவமனை ஆகும். சிறந்த சேவைக்காக தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சென்னை தவிர அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வந்து சிகிச்சைப் பெறுகின்றனர்.

மருத்துவமனையில், பொது மருத்துவம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள், புற்று நோய், நாளமில்லாச் சுரப்பிகள் சார்ந்த கோளாறுகள், எலும்பு நோய்கள், ரத்த நாளங்கள், நரம்பு நோய்கள், இரைப்பை மற்றும் குடல் நோய்கள், முதியவர்களுக்கான சிகிச்சைகள், கல்லீரல், சர்க்கரை நோய், நெஞ்சக நோய்கள் என அனைத்துப் பிரச்னைகளுக்கும் மருத்துவச் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைக்காகவும் தனித்தனிப் பிரிவுகள் இருக்கின்றன.

மேலும், ரத்த நோய்கள், பாலியல் தொடர்பான பிரச்னைகள், சரும நோய்கள், மன நலப்பிரச்னைகள் ஆகியவற்றுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கத் தனிப் பிரிவுகள் உள்ளன. கதிரியக்க சிகிச்சை, நுண்வழி அறுவை சிகிச்சை, மயக்கவியல் துறை என இங்கே இல்லாத பிரிவுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை வசதிகளையும், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களையும் கொண்டிருக்கிறது, ராஜிவ் காந்தி மருத்துவமனை.

அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறி..?:சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் இங்கு பல்வேறு சிகிச்சைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் 123 அடி நீளத்திலும், 29 அடி அகலத்திலும் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை சாப்பிடலாம். இதுதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அம்மா உணவகம் ஆகும். இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் கேள்விக் குறியாகியுள்ளன. அம்மா உணவகத்திற்கு நாளொன்றுக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சேர்த்து ஆயிரம் பேர் வருகிறார்கள். காலையில், இட்லி, பொங்கல்; மதியம் சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர்ச் சாதம்; இரவு நேரத்தில் சப்பாத்தி என வழங்கப்படுகிறது.

ஆனால், ஒரு சில நேரங்களில் சாப்பாத்தி மாவு தட்டுப்பாடு ஏற்படுவதால், உணவருந்த வரும் பொதுமக்கள், அம்மா உணவகத்தில் வேலை செய்யும் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், சமையல் அறையில் சாப்பாத்தி கல், சமையல் அடுப்பு பழுதடைந்துள்ளது.

இதனால், அங்கு பணிபுரியும் பெண்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது, உணவகத்தில் 18 பெண்கள் வேலை செய்கின்றனர். வேலைக்கு இன்னும் ஆட்கள் தேவைப்படுவதாகவும், சம்பளத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தித்தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு, உணவருந்தும் சாப்பாடு தட்டுகளை தள்ளிச்செல்லும் வண்டியின் டயர் பழுதடைந்துள்ளது. அதனால், வண்டியின் டயரை கயிறு கொண்டு கட்டியுள்ளனர்.

'அம்மா உணவக சமையலறையின் வெளியே பெருச்சாளி!':அம்மா உணவகத்தின் சமையலறைக்கு வெளியே பெருச்சாளி இறந்துகிடக்கிறது. அதன் மீது ஈக்கள் மொய்க்கின்றன. இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் சாப்பிடும் மேஜை பழுதடைந்து காட்சிப்பொருளாக கிடக்கிறது. உணவகத்திற்கு வரும் குடிநீர் மெட்ரா லாரி மூலம் வருகிறது.

மூடி இல்லாத வாட்டர் டேங்க்:அம்மா உணவகம் அருகே உள்ள கட்டடத்தில் அதற்கான வாட்டர் டேங்க் 4 உள்ளது. அதற்கு ஒன்றிற்கு கூட மூடி இல்லை. மேலும், பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு வரும் தண்ணீர் சுகாதாரமில்லாமல் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. வாட்டர் டேங்க் சுத்தம் செய்து, பல மாதங்கள் ஆவதாக அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அம்மா உணவகத்தில் கிடைக்கும் குடிநீரை குடித்து நோயாளிகளாகும் அவலநிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுதொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:அருந்ததியர் குடியிருப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details