சென்னை: பாரதிய ஜனதாவில் பட்டியலினப் பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்த பாலசந்தர் என்பவர் நேற்று (மே. 24) இரவு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்த காவல் துறை விசாரணையில், பாலசந்தரின் உறவினர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருகின்றனர். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான பிரதீப் என்பவர், அவரது மனைவி, உறவினர்களுக்கு அடிக்கடி துணி எடுத்து வந்துள்ளார். ஆனால், துணிக்குண்டான பணம் தராமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
மேலும் மாமூல் வசூல் செய்து வந்ததாகவும் இதுகுறித்து உறவினர்கள் பாலசந்தரிடம் தெரிவித்ததால், பாலசந்தர் காவல் துறையினரிடம் நடவடிக்கை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்ததால் மோகன் மற்றும் அவரது மகன் பிரதீப் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் பாலசந்தரை கொலை செய்தனர் எனத் தெரியவந்தது.
பின்னர் இதனை உறுதிபடுத்தும் வகையில் முன்னதாக ரவுடி பிரதீப் கைது செய்யப்பட்டிருந்த போது, அவரது கூட்டாளி ஒருவர் துணிக்கடை உரிமையாளரை மிரட்டும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து பாலசந்தரின் தந்தை விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது உறவினர் துணிக்கடையில் இருந்து ரவுடி பிரதீப், அவரது கூட்டாளிகள் புது துணிகளை எடுத்துவிட்டுப் பணம் கொடுப்பதே இல்லை. இதுமட்டும் இன்றி கடைக்கு வந்து 10,000 முதல் 50,000 ரூபாய் வரை மாமூல் கேட்டு மிரட்டுவார்கள். நான் இருக்கும் போதே ஒரு முறை 50,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்தனர். காவல்துறையிடம் புகார் கொடுத்தும் யாரையும் கைது செய்யவில்லை. இதனால் பிரதீப் கொலை மிரட்டல் விடுத்து வந்தார். காவல்துறை கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்" என்று விஸ்வநாதன் கூறினார்.
இதையும் படிங்க:12 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய மூன்று தெலங்கானா தம்பதியினர் - காவல் துறை சுற்றிவளைப்பு!