தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சிவாஜி'க்கு பால்கே விருது கிடைத்தது எப்படி? - இயக்குநர் இமயத்தின் ருசிகர தகவல்!

நடிகர் ரஜினிகாந்திற்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எல்.வி. பிரசாத், நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் இமயம் கே. பாலசந்தர் ஆகியோர் பால்கே விருதுபெற்றுள்ளனர்.

phalke awards
phalke awards

By

Published : Apr 1, 2021, 1:28 PM IST

சிவாஜி கணேசன்

இந்தியாவின் முதல் திரைப்படமான 'ராஜா அரிச்சந்திரா'வை தயாரித்தவர் தாதா சாகேப் பால்கே. அவரின் பெயரில் திரைப்படத் துறையின் முன்னேற்றத்துக்காகச் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக இது கருதப்படுகிறது.

1952இல் 'பராசக்தி' மூலம் தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்கா பட விழாவில் விருது கிடைத்தது. நடிப்புக்காகப் பல்வேறு விருதுகளை அவர் பெற்றிருந்தாலும், அகில இந்திய விருது கிடைக்காதது பெரும் குறையாகவே இருந்தது.

பால்கே விருது சிவாஜிக்கு வழங்க வேண்டும் எனத் தமிழ்த் திரைப்படத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இதனையடுத்து, 1997ஆம் ஆண்டுக்கான 'பால்கே' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

சிவாஜி கணேசன்

1928ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி பிறந்த சிவாஜியின் இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி. 'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களிலும் அவர் முத்திரைப் பதித்துள்ளார். அனைவரையும் வசீகரிக்கும் கம்பீரக் குரல், உணர்ச்சிப்பூர்வமான உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன்கொண்ட சிவாஜி, நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த சரித்திர நாயகர்களின் கதாபாத்திரங்களான மனோகரா, ராஜராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. அதேபோல் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசத் தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றேதான் சொல்ல வேண்டும்.

நடிகர் திலகம்

பாசமலர், பாவ மன்னிப்பு பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பலே பாண்டியா, ஆலயமணி, ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள், தெய்வமகன், சிவந்த மண், வியட்நாம் வீடு, வசந்த மாளிகை, ராஜபார்ட் ரங்கதுரை உள்ளிட்ட திரைப்படங்கள், இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

நடிப்புச் சக்கரவர்த்தி

இந்நிலையில், பால்கே விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் இயக்குநர் பாலசந்தர் இடம்பெற்றிருந்தார். சிவாஜிக்குப் பால்கே விருது கிடைத்தது தொடர்பாக இயக்குநர் பாலசந்தர் கூறுகையில்,

"எண்ணற்றப் படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் உலகப்புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்தது.

சிவாஜிக்கு விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த, ஆனால் சிவாஜி அதனைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. 'நம்ம, நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

பால்கே விருது தேர்வு தொடர்பான கூட்டம் நடைபெற்றபோது, பலர் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் நான் எழுந்தேன். 'இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்துகொண்டார்.

சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்" என பாலசந்தர் தெரிவித்தார். இதனையடுத்து 1997ஆம் ஆண்டுக்கான 'பால்கே' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

இயக்குநர் கே. பாலசந்தர்

தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930ஆம் ஆண்டு பிறந்தவர் இயக்குநர் கே. பாலசந்தர். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை, திரைத் துறைக்கு அழைத்துவந்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய்தான் பாலசந்தரின் முதல் திரைப்படம். ஆனால் அதன்பிறகு எம்ஜிஆருடன் இணைந்து அவர் பணியாற்றவில்லை.

இயக்குநர் இமயம்

45 ஆண்டுகளுக்கு மேலாக திரைத் துறையில் இருந்த பாலசந்தர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், நடிகைகள், ஜெயசுதா, சுஜாதா, சரிதா, ஜெயந்தி என 30-க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர்.

பல இயக்குநர்களும் பாலசந்தரிடம் பாடம் கற்றவர்களே. 1975ஆம் ஆண்டு இவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானவர்தான் தற்போது பால்கே விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த். இதேபோல் பாலசந்தரின் பட்டறையில் பாடம் பயின்ற பலர் தமிழ்த் திரைத் துறையில் உச்சத்தில் உள்ளனர்.

இயக்குநர் பாலசந்தர்

பாலசந்தர் இயக்கிய இருகோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஆகிய தமிழ்ப் படங்கள் தேசிய விருதை வென்றுள்ளன. கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற பாலசந்தருக்கு 1987ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குருவும் சீடனும்

இதனைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், "பாலசந்தர் படைத்த பாத்திரங்கள் காலத்தை வென்றவை. அவரது பாமா விஜயத்துக்கு இணையான ஒரு நகைச்சுவை திரைக்கதையை யாராலும் எழுத முடியாது.

ஜெயகாந்தனால் ஞானபீட விருதுக்குப் பெருமை கிடைத்தது. அதுபோல, கேபியால் பால்கே விருதுக்கே பெருமை," என கிரேசி மோகன் புகழாரம் சூட்டினார்.

எல்.வி. பிரசாத்

இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான எல்.வி. பிரசாத்திற்கு 1982ஆம் ஆண்டு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது.

1908ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சோமவாரப்பாடு என்ற கிராமத்தில் பிறந்த எல்.வி. பிரசாத், தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என பிரகாசித்தவர். இந்தியத் திரைப்படத் துறையின் மூன்று வெவ்வேறு மொழிகளில் வெளியான முதல் பேசும் படங்களான ஆலம் ஆரா (இந்தி), பக்த பிரகலாதா (தெலுங்கு), காளிதாஸ் (தமிழ்) போன்ற படங்களில் பிரசாத் நடித்துள்ளார்.

phalke awards

தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுத் தலைவர், தென்னிந்திய சம்மேளன தலைவர், திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினர், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த பிராசாத்தின் நினைவைப் போற்றும்வகையில், 2006ஆம் ஆண்டு அஞ்சல் அட்டை முத்திரை வெளியிடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details