கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட மாட்டாது: முறைகேடு நடந்த சங்கங்களில் மட்டுமே நடவடிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை எனவும், முறைகேடு நடந்த சங்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டுமென அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.