தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2021, 6:39 PM IST

ETV Bharat / city

கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட மாட்டாது: முறைகேடு நடந்த சங்கங்களில் மட்டுமே நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை எனவும், முறைகேடு நடந்த சங்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முறைகேடு நடந்த சங்கங்களில் மட்டுமே நடவடிக்கை
முறைகேடு நடந்த சங்கங்களில் மட்டுமே நடவடிக்கை

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டுமென அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

முறைகேடு நடந்த சங்கங்களில் மட்டுமே நடவடிக்கை
இந்த மனுக்கள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களை திடீரென்று கலைக்கக் கூடாது எனவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், கூட்டுறவு சங்கத்தை கலைக்க தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட மாட்டாது என உறுதியளித்ததுடன், முறைகேடு நடந்த சங்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவாதத்தை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details