தமிழ்நாடு

tamil nadu

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை - ஜெயக்குமார் அறிக்கை

சென்னை: கரோனா நோய் சர்வதேச பரவல் காரணமாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலுள்ள தமிழ்நாடு மீனவர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

By

Published : May 15, 2020, 12:19 PM IST

Published : May 15, 2020, 12:19 PM IST

வெளிநாடுகளிலுள்ள தமிழ்நாடு மீனவர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை
வெளிநாடுகளிலுள்ள தமிழ்நாடு மீனவர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

கரோனா நோய் சர்வதேச பரவல் காரணமாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலுள்ள தமிழ்நாடு மீனவர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

"கரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 700க்கும் அதிகமான மீனவர்கள் ஈரானில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டில் கரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் தாயகம் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக தமிழ்நாடு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தமிழ்நாடு அரசு கடிதங்கள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், ஈரானில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஆவண செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மீனவர்களுக்கு தேவையான உணவு, உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மீனவர்களை விரைவில் அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக இதர மாநிலங்களில் தங்கியுள்ள தமிழ்நாடு மீனவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர இயலாத நிலையில் அம்மீனவர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் செய்து கொடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கோவாவில் உள்ள மாலிம் துறைமுகத்தில் மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 மீனவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் மற்றும் அனைத்து அத்தியாவசிய தேவைகளை கோவா அரசு மூலம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 684 மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூருவிலிருந்து 27.03.2020 அன்று சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் தனிமைப்படுத்தப்பட்டு அவரவர் இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும், 2ஆம் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 56 மீனவர்கள் கர்நாடகா மாநிலத்திலிருந்து 11.05.2020 அன்று சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டனர். கர்நாடகா மாநிலம் மால்பே, கேரளா மாநிலம் கண்ணுரில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 118 மீனவர்களை தமிழ்நாடு அழைத்து வர அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

அந்தமான் யூனியன் பிரதேசத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 190 தமிழ்நாடு மீனவர்களை கப்பல் மூலம் விரைவில் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த பின்னர் அம்மீனவர்களை உடனடியாக தமிழ்நாடு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்". இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details