சென்னை:தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே மாதம் 18ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2022-23ஆம் கல்வி ஆண்டில் தனியார்ப பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களில் நுழைவு நிலை வகுப்புகள் (எல்கேஜி, முதல் வகுப்பு) சேர்வதற்கு ஏப்ரல் 20ஆம் தேதி (நாளை) முதல் மே 18 ஆம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களும் இணையதளம், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகை ஆகியவற்றில் மே 21ஆம் தேதி வெளியிடப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் எல்கேஜி வகுப்பிற்குச் சேர விரும்பும் குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2019 ஜூலை 31ஆம் தேதிக்குள், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2016 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2017 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.