தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2021, 9:43 PM IST

ETV Bharat / city

கரோனா தொற்று குறைந்தது நிம்மதி தருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்தது நிம்மதி தருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Subramaniyan
Subramaniyan

சென்னை: கரோனா தொற்று குறைந்து வருவது நிம்மதி தருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் இன்று (ஜூன் 22) நடந்தது.

இதில், மருத்துவத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐந்து மருத்துவ சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “கரோனா தொற்று இன்று 6,895 ஆக குறைந்திருப்பது மன நிம்மதியை தருகிறது, இன்று 13,156 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து இருக்கிறார்கள். அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் எண்ணிக்கை 3.4 லட்சத்திலிருந்து 56,866 ஆக சரிந்திருக்கிறது.
ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவது தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை தொடர வேண்டும். மருத்துவர் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: யார் ஆட்சியில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது: பேரவையில் காரசார விவாதம்!

ABOUT THE AUTHOR

...view details