தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 9, 2021, 3:47 PM IST

ETV Bharat / city

'எல்லோருக்கும் எல்லாம் என்பதே லட்சியம்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட முன்னேற்ற கழகத்தின் லட்சியம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இதுகுறித்து அவர் எழுத்தியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் கட்சியினருக்கு எழுதுகின்ற முதல் கடிதம் இதுவாகும். ஆட்சிப் பொறுப்பு என்பது மலர் மஞ்சமல்ல, அது முள்ளாலான படுக்கை. இதை மனத்தில் வைத்து தமிழ்நாட்டில் மீண்டும் முன்னேற்றப் பணிகளை முயல் வேகத்தில் முடுக்கி விடும் தலையாய பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டை தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே நான் எடுத்திருக்கின்ற சூளுரை. நம் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்வதும், சமூக மேம்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும், பெண்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதை முழுமையாக்குவதும், ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை மீட்டெடுப்பதும் நாம் கொண்டிருக்கின்ற தனிப் பெரும் நோக்கங்கள்.

கடந்த காலத்தை நினைத்து வசைபாடி காலத்தைக் கழிப்பதில் எந்தப் பயனும் இல்லை. இருளைப் பழிப்பதைவிட, அதனை அகற்றும் ஓர் அகல் விளக்கை ஏற்றுவது உன்னதமான செயல். நாம் பதவியேற்றிருக்கும் தருணம், கடுமையான சூழலைக் கொண்டதாக அமைந்திருப்பது காலம் நமக்கு விடுத்திருக்கும் சவால் என்றே கருதுகிறேன்.

இது கொண்டாடுகிற நேரமல்ல, திண்டாடுபவர்களுக்குத் தோள் கொடுத்துக் காப்பாற்ற வேண்டிய நேரம். அதற்கு உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றியினை உரித்தாக்குகிறேன். இத்தருணத்தில் நாம் எத்தகைய விழிப்புணர்வுடன் இருக்கிறோம் என்பதே முக்கியம்.

முகக் கவசம் என்பது, அடுத்தவர்கள் கட்டாயத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல. அது நம்மைக் காத்துக்கொள்ள நாம் எடுக்கிற முன்னெச்சரிக்கை என்பதை நீங்கள் உணர வேண்டும். இந்த காலகட்டத்தில், மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கும்பொருட்டு இரு முக்கியக் கோப்புகளில் நான் கையொப்பமிட்டுள்ளேன். இது வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்குக் கணிசமான உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இதைத்தவிர மக்களுக்காக, அனுதினமும் பணியாற்றுகிற ஊடகத் துறையினரை முன்களப் பணியாளர் என்று அறிவிக்கும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கரோனாவிற்காக உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருமே உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவார்கள்.

பொது மக்கள் முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி முழுமையான விழிப்புணர்வோடு ஒத்துழைப்பு வழங்கினால், நாம் விரைவில் இந்தக் கடுமையான சோதனையிலிருந்து வெளிவரலாம். நான் பணியேற்றிருக்கும் இந்த நேரத்தில் உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் உத்தரவாதம் ஒன்றை அளிக்க விரும்புகின்றேன். நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் கற்றுத் தந்த அரசியல் - நிர்வாக அனுபவத்தின் துணைகொண்டு, சவால்களையும் நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிர்கொண்டு, எல்லோர்க்கும் எல்லாம் என்பதே லட்சியமாக கொண்டு, தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details