தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 30, 2022, 9:46 PM IST

ETV Bharat / city

மலிவான விளம்பரத்திற்காகவே அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளைக்கூறுகிறது - ஈபிஎஸ் தரப்பு வாதம்

தமது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவே அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு
உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு

சென்னை: கடந்த 2019 முதல் 2021ஆம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தலைமைச்செயலர், நெடுஞ்சாலைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது.

நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்தததன் மூலமும், திட்டமதிப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்ததாலும், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகப் புகாரில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.

இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும், தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்துக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று(ஆக. 30) நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞரை வாதிட உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞரின் வாதம்: இதனையடுத்து வாதிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும்; இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.

ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை எனவும், மேலும் டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை எனவும் வாதிட்டார்.

தமது தரப்பினரின் புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் குற்றம்சாட்டப்படுவதாகவும் கூறினார். தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் நேரடியாக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை வைப்பதே தவறு. முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டை கூறும் முன் அதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும்; சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறிவிட்டு அதற்கு இழப்பீடு கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது எனவும் கூறினார்.

ஆதாரமில்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறுவது, மான நஷ்ட வழக்கிற்கு உட்பட்டது என்பதால், தமது தரப்பினர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:ராஜினாமா செய்து விட்டு கழகப் பணி ஆற்றுவோம் என்றேன் யாரும் முன்வரவில்லை ஓ. பன்னீர்செல்வம்...

ABOUT THE AUTHOR

...view details