தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 29, 2020, 5:18 PM IST

ETV Bharat / city

அதிமுக ஆட்சி விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த அதிமுக ஆட்சி விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin

மறைந்த ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காந்தி உருவப்படத்தைத் திறந்து வைத்தபின், காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசுக்கு கும்பிடு போட்டு ஆதரவு தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி. பஞ்சாப் மாநிலத்தில் குறைந்தபட்ச ஆதார விலைக்குக்கீழ் நெல் வாங்க தடை போட்டு சட்டம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கூறுகிறது அச்சட்டம். அந்த தைரியம் பழனிசாமிக்கு உண்டா?

கொஞ்சம்கூட மனசாட்சி இன்றி வேளாண் சட்டங்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, இன்றைக்கு மாட்டு வண்டி ஓட்டி விவசாயிகளை ஏமாற்றுகிறார். விவசாயிகளின் நெல்லைக்கூட கொள்முதல் செய்ய பழனிசாமிக்கு மனமில்லை. போதிய நேரடிக் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தவில்லை. 1000 மூட்டை நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது என்று கைவிரிக்கிறார். அதை செய்யக்கூட கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி தவிக்கின்றனர். விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்று விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்றவர்தான் இந்த பழனிசாமி. முடிந்தால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்காத வேளாண் சட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று சொல்லுங்கள். அதை செய்துவிட்டு மாட்டு வண்டியில் ஏறி விவசாயி வேடம் போடுங்கள்.

மேலும், அரசு நடவடிக்கை எடுத்ததால் கரோனா குறைந்ததாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கரோனாவிற்கு பலி கொடுத்துவிட்டு முதலமைச்சர் பொய் சொல்கிறார். கரோனா வந்தது உண்மை, அது தானாகவே குறைவது உண்மை. தானாக குறைவதை தடியெடுத்து விரட்டுவதுபோல் பொய் சொல்கிறார் முதலமைச்சர். கரோனாவால் மக்களுக்குத்தான் நஷ்டம். ஆனால், பழனிசாமி, விஜயபாஸ்கர், வேலுமணிக்கு லாபம்.

முகக்கவசம் கொள்முதலில் ஊழல், பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் ஊழல், கரோனா பரிசோதனை கருவிகள் வாங்குவதில் ஊழல், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று நடத்தும் கரோனா விளம்பரங்களில் ஊழல். நாளைக்கே கரோனா கொள்முதல் குறித்த அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடும் துணிச்சல் பழனிசாமிக்கு உள்ளதா? அதனால்தான் சொல்கிறேன், எடப்பாடி ஆட்சி தமிழகத்திற்கு, விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி.

எனவே, இந்த ஆட்சி விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும். இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கொண்டாடும் திருநாள் “ என்று கூறினார்.

இதையும் படிங்க: கரோனாவிலும் தோற்று கனமழைக்கும் தோற்று நிற்கிறது அதிமுக அரசு!

ABOUT THE AUTHOR

...view details