தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மழை நீர் வடிகால்களில் கழிவு நீர்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பல்லாவரம் மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை கலக்கச் செய்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை, வசூலிக்கப்பட்ட இழப்பீடு உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை 2 மாதங்களிக் தாக்கல் செய்ய கூட்டு குழுவுக்கு தென் மண்டல பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jun 12, 2020, 12:07 AM IST

Sewage water mixing in pallavaram lake
Sewage water mixing in pallavaram lake

பல்லாவரம் நகராட்சியில் உள்ள மழைநீர் வடிகால்களில், கழிவுநீர் கலக்கப்படுவதாக வெளியான செய்தியின் அடிப்படையில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இதுதொடர்பாக ஆய்வு செய்து, தீர்வு காண்பது குறித்து அறிக்கை அளிக்க பல்லாவரம் நகராட்சி ஆணையர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுவை அமைத்தும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தீர்ப்பாய நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இதுகுறித்து ஆய்வு செய்ததில், கழிவுநீரை கலக்கச் செய்த நான்கு வீடுகள் அடையாளம் காணப்பட்டு, அந்த வீடுகளின் கழிவு நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், சிட்லப்பாக்கம் பேரூராட்சியிலிருந்து கழிவுநீர் கலக்கப்படுவதும் அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூட்டுக்குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், மழைநீர் வடிகால்களில் கழிவு நீரை கலக்கச் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்த பகுதியில் கழிவு நீர் எப்படி சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என, குழுவின் அறிக்கையில் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது.

மேலும், மழைநீர் வடிகால்களில் கழிவு நீரை கலக்க செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது உள்ளிட்டவைகள் குறித்த விரிவான அறிக்கையை 2 மாதங்களில் தாக்கல் செய்ய கூட்டுக் குழுவுக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை தள்ளிவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details