தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2020, 11:26 AM IST

ETV Bharat / briefs

'கட்டுப்பாடுகளை கடுமையாக்கக்கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை' - அமைச்சர் கே.சி. வீரமணி!

வேலூர்: கட்டுப்பாடுகளை கடுமையாக்கக்கூறி, இம்மாவட்ட அமைச்சர் என்ற முறையில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

Minister KC veeramani
Minister KC veeramani

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆரிமுத்துமோட்டூர் பகுதியில் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிக்காக கட்டப்பட்ட சூரிய ஒளிசக்தியுடன் கூடிய 24 பசுமை வீடுகளை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் திறந்து வைத்து வழங்கினர். பின்னர் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது; 'ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகமாகி வருவதால், போக போக கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கும் சூழல் உள்ளதால் இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அதே சமயம் யாரும் ஒத்துழைக்கவில்லை என்றால், நோயை ஒழிப்பதில் சிரமம் ஏற்படும், சவாலாக அமையும். இந்த சூழ்நிலைக்கான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அதிகமாக எடுக்க வாய்ப்புள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடிய விரைவில் கரோனா பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்.

இம்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிக அளவு தயார் நிலையில் உள்ளன. கட்டுப்பாடுகளை கடுமையாக்கக்கோரி, இம்மாவட்ட அமைச்சர் என்ற முறையில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

வேலூர் முழுவதும் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று, சென்னையில் இருந்து வந்தவர்களால் அதிகமாகியுள்ளது. பத்திரப்பதிவு துறை, வணிக வரித்துறையில் வருவாய் இல்லாமல் தத்தளித்து வருகிறோம்.

இந்த இரு துறைகளில் வருவாய் இருந்தால் தான் அரசை நடத்த முடியும் என்ற சூழல் உள்ளது. ஊரடங்கிற்குப் பிறகும் கூட எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கூட, 30 விழுக்காடு வருவாயைக் கூட அடைய முடியவில்லை' எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details