தமிழ்நாடு

tamil nadu

கோவையில் செயல்பாட்டிற்கு வந்த மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரம்!

By

Published : Jul 16, 2020, 10:33 PM IST

கோவை: மனிதக் கழிவுகளை அகற்ற ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள இயந்திரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவையில் செயல்பாட்டிற்கு வந்த மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரம்
கோவையில் செயல்பாட்டிற்கு வந்த மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதன் மதிப்பு ரூ.2 கோடியே 12 லட்சம் ஆகும். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, பாரத் பெட்ரோலியம் சார்பில் மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரம் மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கரோனா வைரஸ் தொற்று குறித்தும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களைக் கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்ட கோவை கேர் ஆப் ( KOVAI CARE APP) என்ற செயலியையும் தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, " மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் வேலைக்கான தடுப்புச் சட்டத்தை அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அதன் வெற்றியாக ஒரு ரோபோட் இயந்திரமானது மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.

கோவையில் இதுவரை 80 ஆயிரத்து 623 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்ததில், ஆயிரத்து 597 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், முழுவதும் பல பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.

எனவே, வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் யாரேனும் இருந்தால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். கோவையில் பெரும்பாலும் அனுமதியின்றி இருசக்கர வாகனங்களில் வருபவர்களால், தொற்று பரவ காரணமாக அமைந்தது.

மாநகராட்சியில் ஒருசில கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அங்கு சுகாதாரத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கோவையைப் பொறுத்தவரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான தேவை இல்லை. மருத்துவத் துறையினர் ஆய்வு செய்த பின்பு, முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாமல் இருப்பதற்கு, அரசு உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details