உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், கார்டிஃப் நகரில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில், இலங்கை அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில், இலங்கை அணி மோசமாக பேட்டிங் செய்ததால் இப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
உலகக் கோப்பையில் பெருமைக்குரிய சாதனைப் படைத்த திமுத் கருணரத்னே
கார்டிஃப்: உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே படைத்துள்ளார்.
இப்போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தாலும், அந்த அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே பெருமைக்குரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய அவர், 52 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். ஆனால், இலங்கை அணியில் மற்ற வீரர்களால்தான் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்த்து களத்தில் நிலைத்து ஆடமுடியாமல் போனது, அந்த அணியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக, இச்சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் ரிட்லே ஜெக்கப்ஸ் 1999இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.