மும்பை:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 1940இல் பூபிந்தர் சிங் பிறந்தார். முதலில், பூபிந்தர் சிங் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். தனது தந்தை நாதா சிங்கிடம் இசைப் பயிற்சி பெற்றார் பூபிந்தர் சிங், சில ஆண்டுகள் டெல்லி தூர்தர்ஷனில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளில் பாடினார்.
அதன்பின்னர் 1962இல், பழம்பெரும் இசையமைப்பாளர் மதன் மோகன் பூபிந்தர் பாடுவதைக் கேட்டு அவரை மும்பைக்கு வரவழைத்து, 'ஹகிகட்' படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இந்தி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார். பாடுவதைத் தவிர, அவர் பல பாடல்களுக்கு கிட்டார் மற்றும் வயலினும் வாசித்துள்ளார்.
பூபிந்தர் வங்காளதேச பாடகியான மிதாலி சௌத்ரியை, 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேலும், பூபிந்திரவும், மிதாலியும் இணைந்து பல கஜல்கள் மற்றும் செமி கிளாசிக்கல் பாடல்களை வெளியிட்டனர். பூபிந்தர் சிங் முதன்மையாக கஜல் பாடலுக்காக அறியப்பட்டவர் என்றாலும், அவர் பல படங்களுக்கு பின்னணி பாடல் பாடியுள்ளார்.
"மௌசம்", "சட்டே பே சத்தா", "அஹிஸ்தா அஹிஸ்தா", "துரியன்", "ஹகிகத்" மற்றும் பல படங்களில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
பிரபல கஜல் பாடகர் பூபிந்தர் சிங் காலமானார் அந்தேரியில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜூலை 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மனைவி மிதாலி ஊடகங்களிடம் உறுதியளித்தார். பூபிந்திர இசையமைப்பாளர் இளையாராஜா இசையில் வெளிவந்த தமிழ் படமான ‘நண்டு’ என்ற படத்தில், “கைசே கஹூன் குச் கெஹ்னா சகூன்" என்ற இந்தி பாடலை பாடியுள்ளார்.
பிரதமர் இரங்கல்:பூபிந்தர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டரில்,'பல தசாப்தங்களாக மறக்கமுடியாத பாடல்களை வழங்கிய பூபிந்தர் சிங் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது படைப்புகள் பலரையும் கவர்ந்தன. இந்த சோகமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:ஆறுபேரைத் தாக்கி அட்டகாசம்; அடங்காத சிங்கத்தால் மக்கள் அச்சம்