தமிழ்நாடு

tamil nadu

UPSC prelims result: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் 14,624 பேர் தேர்ச்சி!

By

Published : Jun 12, 2023, 5:28 PM IST

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் 14,624 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

UPSC
யுபிஎஸ்சி

டெல்லி: யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக தேர்வுகளை நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில், காலியாக உள்ள 1,105 சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 73 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில், யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் இன்று(ஜூன் 12) வெளியாகியுள்ளன. யுபிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முதல் நிலைத் தேர்வில் 14,624 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வர்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும், மேலும் சந்தேகங்கள் இருப்பின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் காலை 5 மணி வரை, 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக முதன்மை எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்விலும் வெற்றி பெற்றவர்கள், இறுதியாக நேர்காணலில் பங்கேற்பார்கள். அடுத்தகட்டமாக முதன்மை எழுத்து தேர்வுக்கான விண்ணப்பம், தேர்வு தேதி உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடந்த மே 23ஆம் தேதி வெளியானது. அதில், 933 பேர் வெற்றி பெற்றனர். இதில் தேசிய அளவில் முதல் நான்கு இடங்களை பெண்கள் கைப்பற்றியிருந்தனர். இஷிதா கிஷோர் என்பவர் முதல் இடத்தைப் பிடித்தார். கரீமா லோஹியா என்ற இளம்பெண் இரண்டாவது இடத்தையும், உமா ஹாரதி என்பவர் மூன்றாவது இடத்தையும், ஸ்மிருதி மிஸ்ரா என்பவர் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

இதையும் படிங்க: UPSC 2023: யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு தொடங்கியது.. கோவையில் தேர்வு எழுதிய 9 மாத கர்ப்பிணி

ABOUT THE AUTHOR

...view details