டெல்லி:டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதேபோல் சிசோடியாவிடமும் பல முறை சிபிஐ விசாரணை நடத்தியது. தன் மீதான ஊழல் வழக்கு முற்றிலும் புனையப்பட்டது என்று சிசோடியா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. விஜய் நாயர், சமீர் மகேந்திரு, அருண் பிள்ளை, குல்தீப் சிங், நரேந்திர சிங் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முக்கிய குற்றவாளியாக பேசப்பட்ட மணீஷ் சிசோடியாவின் பெயர் இடம்பெறவில்லை.