தமிழ்நாடு

tamil nadu

லக்கிம்பூர் வன்முறை: கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல், பிரியங்கா

உத்தரப் பிரதேச லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட எட்டு உழவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

By

Published : Oct 7, 2021, 6:41 AM IST

Published : Oct 7, 2021, 6:41 AM IST

Lakhimpur Kheri, Priyanka and Rahul Gandhi, Priyanka meets farmers, லக்கிம்பூர் கேரி கொடூரம், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, லக்கிம்பூர் கேரி, விவசாயிகள் படுகொலை, அகிலேஷ் யாதவ், லக்கிம்பூர் கேரி, விவசாயிகள் போராட்டம்
லக்கிம்பூர் கேரி கொடூரம்

லக்கிம்பூர் கெரி:கொல்லப்பட்ட உழவரின் குடும்பத்தினரை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

நேற்றிரவு (அக். 6) பாலியா என்னும் இடத்தில் உள்ள கொல்லப்பட்ட உழவர் லவ்பிரீத் வீட்டிற்கு, 9 மணியளவில் இருவரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தாக்குதலில் கொல்லப்பட்ட உள்ளூர் செய்தியாளர் ராமன் கஷ்யாப் வீட்டிற்கும் சென்றனர்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி

இவர்களுடன் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, மாநிலங்களவை உறுப்பினர் தீபெந்தெர் சிங் ஹூடா ஆகியோர் உடனிருந்தனர்.

இவர்கள் சென்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மொத்தம் ஏழு வாகனங்கள் மட்டுமே இவர்களைப் பின்தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா இன்று லக்கிம்பூர் வருகைதருகின்றனர்.

உழவர் போராட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஒன்றிய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக உழவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சூழலில், கார் ஒன்று வேகமாக போராட்டக்காரர்கள் மீது மோதியதில், உழவர் நால்வர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தாக்குதலில், பொதுமக்கள் மூன்று பேர், உள்ளூர் செய்தியாளர் ஒருவர் என மொத்தம் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காணொலி ஒன்று வெளியாகி நாட்டு மக்களை உலுக்கியது.

வெளியான அதிர்ச்சி காணொலி

அதில், அமைச்சர் வாகனங்களை மறித்துப் பேரணியாகச் சென்ற உழவர் மீது கார் ஏற்றிக் கொல்வதுபோல காட்சியிருந்தது. இதில் சம்பந்தபட்டதாகக் சந்தேகிக்கப்படும் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோரைக் கைதுசெய்ய பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இச்சூழலில், போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலுக்கு இடையில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இறந்த செய்தியாளரின் உறவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், உடற்கூராய்வு செய்யாமல் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யமாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுத்து நிறுத்தப்பட்ட தலைவர்கள்

இதனிடையே லக்கிம்பூர் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து லக்னோ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலையும் அனுமதிக்காமல் உபி அரசு தடைவிதித்தது.

அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

சந்தேக அமைச்சர் உள் துறை அமைச்சருடன் சந்திப்பு

இவ்வேளையில் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவைஅவரது அலுவலகத்தில், உழவர் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா சந்தித்துப் பேசினார்.

அப்போது லக்கிம்பூர் கேரி டிகோனியா கிராமத்தில் நடந்தது குறித்து விளக்கமளித்தார். அதில், "தனது பூர்விக கிராமமான பன்வீர்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் குஸ்தி பந்தயம், இந்த ஆண்டும் நடந்தது. அந்த விழாவில் நானும் என் மகனும் கலந்துகொண்டோம். ஆனால், என் மகன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், டிகோனியா கிராமத்தில் உழவர் மீது காரை ஏற்றிக்கொன்றதாகவும், தன்னைப் பிடிக்க முயன்ற குர்விந்தர் சிங்கை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தியதாகவும் வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும், சமூக இணையதளங்களில் வெளியான காணொலிகள் அனைத்தும் சித்திரிக்கப்பட்டவை என்றும் அஜய் மிஸ்ரா குறிப்பிட்டார். தன் மகன் பன்வீர்பூரில்தான் தங்கி இருந்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

நிவாரணம்

லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட உழவர், செய்தியாளர் குடும்பத்துக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னியும், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் அறிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் பிரியங்கா காந்தி

தாமாக முன்வந்து வழக்கு

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி சூரிய காந்த், ஹிமா கோலி ஆகியோரின் அமர்வு இன்று (அக். 7) வழக்கை விசாரிக்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details