தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 15, 2022, 4:00 PM IST

ETV Bharat / bharat

இந்தியா தற்சார்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 62ஆவது வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

Climate change, sustainable development issues of prime importance: President Droupadi Murmu
Climate change, sustainable development issues of prime importance: President Droupadi Murmu

டெல்லி:தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 62ஆவது வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று (செப். 15) குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர். அவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், "நமது உரையாடலின் போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையாக பாதுகாப்பு உள்ளது. பாதுகாப்பு என்பது அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்களிலும் முக்கியதுவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் நோக்கம், உத்திப்பூர்வமான பொருளாதார, அறிவியல் பூர்வமான, அரசியல் ரீதியான, தேசிய பாதுகாப்பு தொழிலியல் அம்சங்கள் பற்றிய பாடத்தை படிப்பதாகும். இந்த தேசிய பாதுகாப்பு கல்லூரி பல ஆண்டுகளாக அதன் நோக்கத்தை நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கல்லூரியின் 62ஆவது பாடத்திட்டத்தில் ஆயுதப்படைகளில் இருந்து 62 பேரும், குடிமைப்பணிகளில் இருந்து 20 பேரும், நட்புறவு கொண்ட வெளிநாடுகளில் இருந்து 35 பேரும், பெருவணிகத்துறையில் இருந்து ஒருவரும் சேர்ந்துள்ளனர்.

இது ஒரு தனித்துவமான அம்சம். பல்வேறு கண்ணோட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை பாடத்திட்ட உறுப்பினர்களுக்கு இது வழங்குகிறது. இதன் மூலம் அவர்களது எண்ணங்களையும், புரிதல்களையும் விரிவுபடுத்த முடியும். மிகவேகமாக இயங்கிவரும் உலகில் நாம் வசிக்கிறோம். இதில் சிறிய மாற்றம் கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் இது பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டிருக்கும். கோவிட் பெருந்தொற்றின் வேகமும், பரவலும் மனிதகுலம் எதிர்கொண்ட அச்சுறுத்தலுக்கு ஒரு உதாரணமாகும்.

மனிதகுலம் எத்தகைய பாதிப்புக்கும் உட்பட்டது என்பதை நாம் உணர அது வழிவகுத்தது. பாரம்பரிய அச்சுறுத்தல்களுடன் எப்போதும் கண்டிராத இதுபோன்ற சீற்றங்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பருவநிலை மாற்றமும், நீடித்த வளர்ச்சியும் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண நாடுகள் ஒன்றிணைந்து பாடுபடுவது அவசியமாகும். நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளுடன், பாதுகாப்பு கொள்கைகளும் ஒன்று சேரும் நேரமாக இது உள்ளது. எனவே நம்மை பன்நோக்கு, பல பரிமாண அணுகுமுறையுடன் தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

ஒரு நாடாக இந்தியா தற்சார்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த கண்ணோட்டத்தை சாத்தியமாக்க பல்வேறு கொள்கை முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தொலைநோக்கு பார்வைதான் இந்தியாவை வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது. சமீபத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. அது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம். இத்தகைய நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தருகின்றன. இந்த முன்னேற்றப் பாதையில் உறுதியான முறையில் தொடர்ந்து பயணிப்போம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மலேசியாவின் முன்னாள் அமைச்சர் சாமி வேலுவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details