தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2021, 4:14 PM IST

ETV Bharat / bharat

பாஜகவுக்கு எதிராக 'ஒன்றிணைவோம் வா' - எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

பாஜகவின் சர்வாதிகாரப்போக்கை எதிர்க்க ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி அழைப்புவிடுத்துள்ளார்.

Mamata Banerjee
Mamata Banerjee

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எட்டுக்கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் திருணமூல் காங்கிரஸ்-பாஜக இடையே காரசாரமான மோதல் நிலவிவருகிறது. அதற்கான பரப்புரை தீவிரமடைந்துவரும் நிலையில், நாளை முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மம்தாவுக்கு எதிராக அவரது முன்னாள் தளபதியான சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் களம்காண்கிறார்.

வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக மம்தா பானர்ஜி பாஜக அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் ஸ்டாலின், சாமஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோருக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

அதில், "நாட்டின் ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் மத்திய பாஜக அரசிடமிருந்து பாதுகாக்க அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அண்மையில் தலைநகர் டெல்லியின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கும்விதமான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது.

மக்களாட்சித் தத்துவத்தைத் தகர்த்து துணைநிலை ஆளுநருக்கு அதிகாரத்தை அளிக்கும் இந்தச் செயல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் இருமுறை தோற்ற பாஜக இதுபோன்ற ஜனநாயக விரோத முறையில் டெல்லியின் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறது.

டெல்லியைப் போலவே பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை மத்திய அரசு ஏவிவிட்டு மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகிறது. மத்திய அரசின் அதிகாரத்திற்குகீழ் செயல்படும் அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத் துறைகளைப் பயன்படுத்தி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்கிறது. திருணமூல், திமுக தலைவர்கள் அண்மையில் இதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசுகளுக்கு மத்திய நிதி முறையாக வழங்கப்படுவதில்லை. பல மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது.

தனியார் மைய கொள்கையைத் தீவிரத்துடன் செயல்படுத்தி அரசு சொத்துகளைத் தாரைவார்க்கிறது. பிரதமர் மோடியின் இதுபோன்ற மோசமான அணுகுமுறையால் மத்திய-மாநில உறவு என்பது வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த பாஜக குறிக்கோள் வைத்து செயல்பட்டுவருகிறது. எனவே, ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பற்ற வேண்டும்" என நீண்ட கடிதத்தை மம்தா எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:ராகுலுக்கு ஸ்டாலினின் அன்புக்கட்டளை!

ABOUT THE AUTHOR

...view details